கொரோனாவை விட மோசமான வைரஸ் திமுக... 2021ல் அரசியலை விட்டே விரட்டி புரட்சி ஏற்படுத்துவோம் - ஓபிஎஸ்
2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுடன் திமுகவை அரசியலை விட்டு ஒரேடியாக விரட்ட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: 2020ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்தது. அதை தமிழ்நாட்டில் இருந்து விரட்டி விட்டோம். கொரோனாவை விட மோசமான வைரஸ் ஆக உள்ள திமுகவை அரசியலை விட்டு ஓட ஓட விரட்ட வேண்டும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சென்னை வானகரத்தில் இருக்கும் ஸ்ரீவாரு மண்டபத்தில் கூடியது. கூட்டத்தின் தொடக்கத்தில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு, அதிமுக உறுப்பினர்கள், மத்திய அமைச்சர் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பொதுக்குழுவில் அதிமுக அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அதிமுக அரசின் செயல்பாடுகள் குறித்தும் சட்டமன்றத் தேர்தல் குறித்தும் பேசினர்.
அரசியல் புரட்சி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்குப் பிறகு பேசிய ஓ.பன்னீர் செல்வம், ஆரம்பத்திலேயே அதிரடியாக பேசினார். 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் புதிய புரட்சி உருவாகும். 2020ஆம் ஆண்டில் கொரோனா என்ற கொடி வைரஸை விரட்டினோம். கொரோனாவை விட மோசமான வைரஸ் ஆக திமுக திகழ்கிறது. திமுகவை ஒரேடியாக அரசியலை விட்டு விரட்ட வேண்டும்.
ஆட்சி பீடத்தில் அமரவைப்போம்
மக்களின் மகத்தான ஆதரவோடு 3வது முறையாக ஆட்சி பீடத்தை ஏற்கப்போகிறது. மறைந்த முதல்வர்கள் அதிமுகவையை நிறுவிய எம்ஜிஆர், ராணுவ கட்டுக்கோப்பாக உயர்த்திய ஜெயலலிதா ஆகியோரின் ஆசியுடன் மீண்டும் அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவோம்.
கபட வேடதாரிகள்
அதிமுகவை எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது. அதிமுகவில் சாதாரண தொண்டர் கூட முதல்வர் ஆக முடியும். கபட வேடதாரிகள் நல்ல பிள்ளைகள் போட வேடம் போடுகின்றனர். திமுகவின் துரோகங்களை மக்களிடம் எடுத்துச்சொல்லுங்கள்.
மக்களின் சேவகர்கள்
மக்கள்தான் எஜமானர்கள் நாம் எல்லோரும் பணியாற்றும் சேவகர்கள். இங்கே யாரும் யாருக்கும் அடிமையில்லை. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். மக்களின் மகத்தான ஆதரவை சிந்தாமல் சிதறாமல் வாக்குகளாக மாற்ற வேண்டும்.
வெற்றிதான் குறிக்கோள்
அதிமுக ஒரு எஃகுக் கோட்டை அதை யாரும் அசைக்க முடியாது. எங்கோ ஒரு மூலையில் இருந்த நம்மை இங்கு வைத்து அமர வைத்தது ஜெயலலிதா. அதிமுகவிற்கும் ஜெயலலிதாவிற்கும் நன்றிக்கடன் ஆற்ற வேண்டும். வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும்.
கட்சிக்கு விசுவாசம்
அதிமுகவில் வேஷ்டி கட்டும் ஆண்கள் உண்டு கோஷ்டி சேர்க்கும் ஆட்கள் இல்லை. எனக்கு மட்டும் விசுவாசமாக இருங்கள் என்று நான் சொன்னதில்லை. கட்சிக்கு மட்டுமே அனைவருமே விசுவாசமாக இருங்கள் என்று சொல்கிறேன். எந்த கட்சியிலும் இந்த சுதந்திரம் கிடையாது. வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் ஒ.பன்னீர் செல்வம். கூட்டத்தின் முடிவில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் வாகனங்களில் பாதுகாப்பாக பத்திரமாக சொந்த ஊர் போய் சேர வேண்டும் என்றும் அக்கறையுடன் கேட்டுக்கொண்டார்.