தென் சென்னையெல்லாம் கேட்காதீங்க.. டபாய்த்த அதிமுக.. வட போச்சே வருத்தத்தில் பாஜக!
சென்னை: என்னதான் அதிமுகவை டாமினேட் செய்தாலும் கூட சில விஷயங்களில் பாஜகவால் அதிமுகவிடம் அடித்துப் பேச முடியவில்லை. காரணம், அவர்களின் பலவீனம் அப்படி இருக்கிறது.
தேர்தல் நெருங்கி வந்த சூழலில் அதிமுக எப்படியும் பாஜகவுடன்தான் கூட்டணி அமைக்கும். டெல்லியில் இருந்து வருபவர்கள்தான் பாஜகவுக்கு எத்தனை இடங்கள், எந்த எந்த இடங்கள் என்பதையெல்லாம் முடிவு செய்வார்கள் என்றெல்லாம் ஹேஷ்யங்கள் கொடிகட்டி பறந்தன.
எதிர்பார்த்தது போலவே அதிமுக பாஜக கூட்டணி அமைந்தாலும் தொகுதிகளை பங்கு வைத்துக் கொள்வதில் அதிமுக கெத்து காட்டியே வருகிறது. வெறுமனே 5 தொகுதிகளோடு பாஜகவை அடக்கிய அதிமுக இப்போது தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதிலும் “தில்”லாகவே இருப்பதாக செய்திகள் வருகின்றன.

பாஜக
பாஜக தங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதும் கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், தென் சென்னை மற்றும் ராமநாதபுரம் அல்லது திருச்சி ஆகிய 5 தொகுதிகளைக் கேட்டது. ஆனால் அதிமுகவோ கன்னியாகுமரி, கோவை, தூத்துக்குடி, வட சென்னை, நீலகிரி ஆகிய 5 தொகுதிகளை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியதாம்.

தென் சென்னை கிடையாது
கன்னியாகுமரி, கோவை, மற்றும் தென்சென்னை தொகுதிகள் எப்போதுமே தங்களுக்கு மிகவும் சாதகமான தொகுதிகள் என்று பாஜக கருதுகிறது. இதில் இப்போது கன்னியாகுமரியும் கோவையும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட சூழலில் தென்சென்னையை பாஜகவுக்கு ஒதுக்க முடியாது என்று அதிமுக திட்டவட்டமாக கூறிவிட்டதாக தெரிகிறது.

பாஜகவுக்கு ஏமாற்றம்
தென்சென்னையை தங்களுக்கு மிகவும் சாதகமான தொகுதியாக கருதும் பாஜக முதன்முதலில் அதிமுகவோடு கூட்டணி அமைத்தது. அப்போது திமுகவும் பாஜகவும் தென்சென்னையில் மோதின. இதில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு பாஜக வேட்பாளர் ஜனா கிருஷ்ணமூர்த்தியை 17000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 17000 வாக்குகள் மட்டுமே குறைந்ததால் அந்த தொகுதியை அப்போதிலிருந்தே தங்களுக்கு சாதகமான தொகுதியாக பார்த்து வருகிறது பாஜக. அதன் பின்னர் 2009 ம் நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் 2014 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

அதிமுகவே மீண்டும் போட்டி
2014 -ம் ஆண்டு தென்சென்னை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் இல.கணேசனை தோற்கடித்தார். தற்போது மீண்டும் அதிமுகவே இங்கு போட்டியிடப் போகிறது. இதனால் அதிமுக தரப்பு தென்சென்னை தொகுதியை பாஜகவுக்கு தரமுடியாது என்று கை விரித்துவிட்டதாக கூறிவிட்டதாம். இதனால் வட போச்சே என்ற மனநிலையில் உள்ளதாம் பாஜக. குறிப்பாக தமிழிசைக்குத்தான் பெருத்த ஏமாற்றமாம்!












Click it and Unblock the Notifications