அடுத்த 6 நாள் எப்படி? சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கான முக்கிய வானிலை அப்டேட்.. வெளியான முழுவிபரம்
சென்னை: சென்னை உள்பட 4 முக்கிய மாவட்டங்களில் அடுத்த 6 நாட்களுக்கான வானிலையை பற்றி வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி வெளுத்து வாங்கி வருகிறது. துவக்கத்தில் சென்னையை புரட்டிப்போட்ட கனமழை அதன்பிறகு கடந்த சில நாட்களாக ஓய்வு எடுத்தது.
அதன்பிறகு சில நாட்கள் கனமழை பெய்தது. இந்நிலையில் தான் 2 நாட்களாக மழையின் அளவு ஓரளவு குறைந்துள்ளது.
ஜில் ஜில்! கூல் கூல்! சென்னைக்கு “ஹாய்” சொல்லும் பனி! அப்போ மழை “இனி?” - வானிலை மையம் சொல்வது இதான்
4 மாவட்டங்களில் கனமழை
சென்னையில் முன்கூட்டியே மழை நீர் வடிகால் பணிகள் துவங்கப்பட்டதால் பெரும் வெள்ளம் தவிர்க்கப்பட்டது. சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்தாலும் கூட தண்ணீர் வடிந்து ஓடியது. இருப்பினும் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் தொடர்ந்து பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பூந்தமல்லியில் பல்வேறு இடங்களில் இன்னும் கூட தண்ணீர் வடியவில்லை.
அடுத்த 6 நாள் எப்படி?
இதனால் இந்த மழையின் காரணமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 6 நாட்களுக்கான வானிலை தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இன்று முதல் அடுத்த 3 நாள்
அதன்படி சென்னை உள்பட 4 மாவட்டங்களிலும் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமான மழை பொழிய வாய்ப்பு உள்ளது. காலையில் மூடுபனி நிலவும். நவம்பர் 18 ம் தேதியான நாளை மேகமூட்டம் நிலவும். இடியுடன் கூடிய மிதமான மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ளது. நவம்பர் 19ம் தேதி பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இடியுடன் கூடிய மிதமான மழை பொழிவுக்கு வாய்ப்பு இருக்கிறது.
நவம்பர் 20 முதல் நவம்பர் 22 வரை
நவம்பர் 20ம் தேதி பொதுவாக வானம் மேகமூட்டமாக இருக்கும். இதேவேளையில் இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நவம்பர் 21ம் தேதியை பொறுத்தமட்டி்ல வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 22ம் தேதியில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். இடியுடன் கூடிய மிதமான மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ளது'' என கூறப்பட்டுள்ளது.