15 மாவட்டங்கள்.. ரெடியா இருங்க! தமிழ்நாட்டில் இன்று வெளுக்க போகும் கனமழை.. எங்கு பெய்யும்?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக மழையின் தீவிரம் அதிகரித்து உள்ளது.

வடகிழக்கு பருவமழை
இந்த வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தேனி, திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம், மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை
சென்னையை பொறுத்தவரை மாலை நேரத்திற்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நேற்று காலையில் இருந்தே தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைபெய்தது . கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.

மழை தொடரும்
இந்த நிலையில்தான் இன்றும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் மேலும் 3 நாட்களில் தமிழ்நாட்டில் தீவிர கனமழை பெய்ய போவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நாளை திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அடுத்த 3 நாட்கள்
நாளை வேலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. சென்னையில் பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் இருக்கும். அதேபோல் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரத்திற்கு பின்பாக நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்யும். இரவு நேரத்தில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. கடலில் காற்று வீசும் அளவு இயல்பாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications