செங்குன்றத்தில் செம மழை.. முகப்பேரில் முகத்தில் அறையும் வெயில்.. சென்னையை குழப்பும் வானிலை
சென்னை: செங்குன்றத்தில் மழை பெய்து வரும் நிலையில் முகப்பேரில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இப்படி ஆங்காங்கே ஒரு வானிலை சென்னைவாசிகளை குழப்பி வருகிறது.
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம்அறிவித்தது.
அதாவது ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்திருந்தது. கோடை வெப்பத்தால் தகித்து வந்த நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ந்தனர்.

சென்னை
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து பூமியை குளிர வைத்தது. இந்த நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வந்தது. சென்னை அண்ணா சாலை, காமராஜர் சாலை, எழும்பூர், சிந்தாதிரிப்போட்டை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது.

ஆபீஸ் செல்வோர்
இதைத் தொடர்ந்து ஆபீஸ் செல்வோருக்காக ஆங்காங்கே சட்டென வானிலை மாறி வெயில் வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. தற்போது சென்னையில் 3 விதமான வானிலை நிலவுகிறது. அதாவது செங்குன்றம், மூலக்கடை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் குளிர்ச்சி நிலவி மக்கள் ஏசி, ஃபேனை ஆப் செய்துவிட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

முகப்பேரில் வெயில்
ஆனால் முகப்பேர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அம்பத்தூர், அண்ணாநகர், கோயம்பேடு, அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. ஆனால் சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் மந்தமான வானிலை நிலவி வருகிறது. இப்படி மழை, வெயில், மந்தமான வானிலை என சென்னை மக்களை குழப்பி வருகிறது.

குழம்பிய மக்கள்
இது போன்ற வானிலையால் வற்றல், மிளகாய், தனியா காய வைக்கலாமா, துணி காய வைக்கலாமா என்ற குழப்பமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொருட்களை காய வைத்துவிட்டு வானத்தை அன்னார்ந்து பார்க்கும் நிலையே நீடிக்கிறது. சில நாட்களுக்கு இப்படியான வானிலைதான் இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனினும் மழை பெய்யும் இடங்களில் மக்கள் மனம் குளிர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications