சென்னைக்கு செமமழையுடன் தொடங்கும் வடகிழக்கு பருவமழை.. கூல் செய்தி சொன்ன வெதர்மேன்
சென்னை: அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் சென்னைக்கு செம மழையுடன் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என தமிழ்நாடு வெதர்மேன் நல்ல செய்தியை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் கிழக்கிலிருந்து காற்று வீசும் பகுதிகளுக்கு மழை எப்படி ஏற்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். கடலோர பகுதிகளில் இரவு முதல் அதிகாலை வரையும் உள்மாவட்டங்களில் மாலை முதல் இரவு வரையும் மழை பெய்யும்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு பகுதியில் இருந்து வீசும் காற்றுடன் இணைகிறது. காற்றின் திசை வடக்கிலிருந்து தெற்கு சில நேரங்களில் லேசாக கிழக்கு பகுதிகளிலும் வீசும்.

தென் தமிழகம்
எனவே வெப்பச்சலனத்தால் தென் தமிழகம் மிகவும் பலனடையும். நாளை காலை 8.30 மணியளவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்யும். கிழக்கு காற்று வீசுவதால் பாபநாசம் முதல் மாஞ்சோலை வரை நல்ல மழை பெய்யும்.

விருதுநகர்
நாளை கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தென்காசி, தேனி நீலகிரி ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அது போல் ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்திய வானிலை மையம்
அது போல் தென் கேரள மாவட்டங்களான கொல்லம், கோட்டயம், பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் ஆகியவற்றுக்கு வெப்பச்சலனத்தால் மழை கிடைக்கும். வரும் 28-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடலோர பகுதி
வடகிழக்கு பருவமழையால் தமிழக கடலோர பகுதிகளில் நல்ல மேகக் கூட்டங்கள் கிடைக்கும். இதனால் 28, 29 ஆகிய தேதிகளில் ஒன்று மாற்றி மற்றொன்று நல்ல மேகக் கூட்டங்களால் நல்ல மழையுடன் வடகிழக்கு பருவமழை தொடங்கும். மேகக் கூட்டங்கள் கிழக்கு பகுதிகளில் இருந்து நகர்வதை காண ஆவலாக உள்ளேன். இந்த மழை தமிழக கடலோர மாவட்டங்கள், சென்னைக்கு நல்ல பலனை கொடுக்கும்,. சென்னை மட்டுமல்லாது காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்துக்கும் நல்ல மழையை கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications