நான் முதல்வன் திட்டம்: வங்கி தேர்வில் முதல் முயற்சியிலேயே பாஸான கமலி! பெற்றோர் நெகிழ்ச்சி
சென்னை: தமிழக அரசின் "நான் முதல்வன் திட்டத்தின்" கீழ் பயிற்சி பெற்ற நெசவுத் தொழிலாளியின் மகள் வங்கித் தேர்வு எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். தேர்வு முடிவுகளை தனது தாய், தந்தையுடன் காணும் போதே அந்த பெண்ணுக்கு அத்தனை மகிழ்ச்சி!
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமலி. இவரது தந்தை நெசவுத் தொழில் செய்து வருகிறார். கமலிக்கு சிறு வயது முதலே வங்கி அதிகாரியாக வேண்டும் என்ற கனவு இருந்ததாம். ஆனால் இதற்காக எந்தப் பயிற்சி வகுப்புக்கும் செல்ல முடியாத அளவுக்கு பொருளாதார சூழல் இருந்தது.

இந்த நிலையில்தான் ஏழை, நடுத்தர வகுப்பு மாணவர்களும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று நல்ல இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட "நான் முதல்வன் திட்டம்" பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கட்டணமில்லா உண்டு உறைவிட பயிற்சி திட்டத்தில் கமலி சேர்ந்துள்ளார். இதில் அவர் அங்கேயே தங்கி படித்து வந்தார். அவருக்கு அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்கள் சொல்லிக் கொடுத்தனர்.
இதனால் வங்கித் தேர்வுக்கான நுணுக்கங்களை கற்ற கமலி, அந்த தேர்வுக்காக தீவிரமாக தயாரானார். எஸ்பிஐ நடத்திய probationary officer தேர்வில் கமலி கலந்து கொண்டார். மிகவும் கடினமான இந்த தேர்வில் முடிவுகள் வெளியான நிலையில் அதில் முதல் முயற்சியிலேயே கமலி பயிற்சி வெற்றி பெற்றுள்ளார்.
தேர்வு முடிவுகளை வீட்டில் தனது தாய், தந்தையுடன் பார்த்த கமலி, துள்ளி குதித்தார். மேலும் தனது மகள் தேர்ச்சி பெற்றதை அறிந்த பெற்றோர், "ரிசல்ட் வந்துருச்சு சாமி! ஜெய்ச்சுட்ட கண்ணு, நான் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பலன் கொடுத்துட்டடா என் சாமி. முருகந்தான் காப்பாத்துனான்" என அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து கமலி கூறுகையில், "என்னைப் போன்ற எளிய குடும்பத்து மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டம் ஒரு வரப்பிரசாதம்" என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு கமலியால் புது நம்பிக்கை பிறந்துவிட்டது.












Click it and Unblock the Notifications