முதலீடுகளை ஈர்க்க 'யாதும் ஊரே' இணையதளம்... முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க 'யாதும் ஊரே' என்ற இணையதளம் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட அவர், உலகெங்கும் உள்ள தமிழர்கள், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு ஏதுவாக முதலீட்டு தூதுவர்களை உருவாக்கி, "யாதும் ஊரே" என்ற தனி சிறப்பு பிரிவு மற்றும் வலைதளம் ரூ.60 லட்சம் செலவில் உருவாக்கப்படும். கோவையில் ஐ.டி நிறுவன தேவைக்காக 200 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டட வளாகம் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், உற்பத்தியை பெருக்க வழங்கப்படும் மானியம் 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். அரசின் தரவுகளை பாதுகாக்க புதிய தொழில்நுட்பத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
அதே நேரம், "மக்களைத் தேடி அரசு" என்ற திட்டம் 90 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார். நான்காவது தொழில் புரட்சிக்கான தகவல் தொழில் நுட்பங்களின் மூலம் தமிழ்நாட்டின் மின் ஆளுமையை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆளுநர் உரைக்கு பதிலளிக்கும் போது தெரிவித்திருந்தை அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறோம் என பெருமையாக சொல்லும் திமுகவினர், தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற நாடாளுமன்றத்தில் பேசி உதவ வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications