படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா?
சென்னை: மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் இந்தியாவின் அன்றாட வாழ்க்கையையும் மெதுவாக பாதிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சமையல் எரிவாயு, சிஎன்ஜி மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்து வருவது பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வீடுகள் முதல் தொழிற்சாலைகள், போக்குவரத்து துறை மட்டுமல்லாமல் இறுதிச்சடங்கு சேவைகளிலும் கூட இந்த தாக்கம் உணரப்படுகிறது.
இஸ்ரேல் - ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடையே நடைபெற்று வரும் மோதல் காரணமாக உலகளாவிய எரிவாயு மற்றும் எல்.என்.ஜி (LNG) விலைகள் உயர்ந்துள்ளன. இந்த போர் காரணமாக உலகின் முக்கியமான எரிசக்தி விநியோக பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், பல நாடுகளுக்கு எரிவாயு கிடைப்பதில் சிக்கல்கள் உருவாகியுள்ளன.

இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் பெரிதாக உயரவில்லை என்றாலும், பிற எரிவாயு துறைகளில் அதன் தாக்கம் தெரிகிறது. மத்திய அரசு வரி குறைப்பு மற்றும் சலுகைகள் மூலம் பெட்ரோல், டீசல் விலைகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.94 முதல் ரூ.100 வரை நிலைத்துள்ளது.
ஈரான் இஸ்ரேல் போர்
ஆனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 10 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு 75 முதல் 85 அமெரிக்க டாலர் வரை சென்றுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் இந்தியாவுக்கான எல்.என்.ஜி இறக்குமதியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவுக்கு எல்.என்.ஜி வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றான கத்தாரிலிருந்து வரும் இறக்குமதி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
எரிவாயு தட்டுப்பாடு
இந்தியாவின் மொத்த எல்.என்.ஜி விநியோகத்தில் சுமார் 8 சதவீதம் இந்த நாட்டிலிருந்து கிடைத்துவந்தது. தற்போதுள்ள கையிருப்பு இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழில்துறை மற்றும் போக்குவரத்து துறைகளில் இதன் தாக்கம் ஏற்கனவே உணரப்படுகிறது. அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் மூலம் எரிவாயு பெறும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் கூடுதல் எரிவாயு கட்டணம் அதிகரித்துள்ளது. முன்பு ஒரு ஸ்டாண்டர்ட் க்யூபிக் மீட்டருக்கு ரூ.40 இருந்த கட்டணம் தற்போது ரூ.119 ஆக உயர்ந்துள்ளது.
சிஎன்ஜி விலை
அதேபோல் சிஎன்ஜி விலைகளும் சில நகரங்களில் உயர்ந்துள்ளன. குறிப்பாக டெல்லி மற்றும் குஜராத் மாநிலத்தின் சில பகுதிகளில் சிஎன்ஜி விலை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ சிஎன்ஜி விலை ரூ.78 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படுகிறது.
எல்பிஜி நெருக்கடி
இந்த எரிவாயு தட்டுப்பாடு சில இடங்களில் எதிர்பாராத பிரச்சனைகளையும் உருவாக்கியுள்ளது. குறிப்பாக புனே நகரத்தில் இறுதிச்சடங்கு சேவைகளில் கூட அதன் தாக்கம் காணப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் நடத்தும் மயானங்களில் பயன்படுத்தப்படும் எரிவாயு அடிப்படையிலான தகன சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. புனே மாநகராட்சி வெளியிட்ட தகவலின்படி, எரிவாயு மயானத்தில் செயல்பட்டு வந்த மூன்று எரிவாயு தகன உலைகள் தற்போது மூடப்பட்டுள்ளன.
எரிவாயு மயானம் மூடல்
இந்த மயானத்தில் வழக்கமாக தினமும் சுமார் 20 இறுதிச்சடங்குகள் நடைபெறும். தற்போது கிடைக்கும் எரிவாயு இரண்டு தகனங்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு தகனத்திற்கு சுமார் 18 கிலோ எரிவாயு தேவைப்படுகிறது. இதனால் தற்போது அந்த மயானத்தில் உள்ள மின்சார தகன உலைகள் மற்றும் மர எரிப்பு அமைப்புகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு உள்ள ஐந்து மின்சார உலைகள் மற்றும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வசதியுடன் கூடிய மர தகன அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளன.
மயானங்கள்
முன்னதாக காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் நகரம் முழுவதும் எரிவாயு அடிப்படையிலான மயானங்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி துல்சிராம் பர்னிங் காட், வாஹோலி, தனோரி, கொரேகான் பார்க், பானேர், பாஷான், சுஸ்-மலுஞ்சே, உத்தம்நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் புதிய எரிவாயு தகன மையங்களை அமைக்க திட்டம் இருந்தது. நகராட்சி தரவுகளின்படி, புனே நகரில் தினமும் சுமார் 100 முதல் 150 வரை மரணங்கள் பதிவாகின்றன. அந்த நகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 24 மயானங்கள் உள்ளன.












Click it and Unblock the Notifications