இல.கணேசன் வீட்டில் விசேஷம்.. களைகட்டிய சதாபிஷேகம்.. செண்டை மேளம் அடித்த மம்தா பானர்ஜி
சென்னை: மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசன் சகோதரர் சதாபிஷேக விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் மமதா பானர்ஜி செண்டை மேளம் வாசித்து அசத்தினார்.
முன்னாள் பாஜக தலைவரும், மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநருமான இல.கணேசன் விடுத்திருக்கும் அழைப்பின்பேரில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று மாலை சென்னை வந்தடைந்தார்.
சென்னை வந்த மமதா பானர்ஜி, முதல்வர் ஸ்டாலினை, அவரின் இல்லத்துக்கே சென்று நேரில் சந்தித்தார். அதைத் தொடர்ந்து, ஸ்டாலின் குடும்பத்தினரையும் மமதா சந்தித்துப்பேசினார்.

சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மமதா பானர்ஜி, முதல்வர் ஸ்டாலின் என்னுடைய சகோதரர் போன்றவர். குடும்ப நிகழ்ச்சி தொடர்பாக கவர்னர் விடுத்த அழைப்புக்காகச் சென்னை வந்திருக்கிறேன். ஆனால், ஸ்டாலினைப் பார்க்காமல் நான் எப்படி சென்னையிலிருந்து செல்லமுடியும். இரண்டு அரசியல் தலைவர்களும் சேர்ந்து அரசியலைத் தவிர வேறு விஷயங்களைப் பற்றியும் பேசலாம், நாங்கள் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. அரசியலைவிட வளர்ச்சி முக்கியம் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார்.
இன்று காலையில் சதாபிஷேக விழாவில் பங்கேற்க வந்தார் மமதா பானர்ஜி. திருமண மண்டப வாசலில் பெரிய அளவில் செண்டை மேளம் வைத்து இசைத்துக்கொண்டிருந்தனர். அதை சிறிது நேரம் ரசித்து கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் மேளம் இசைப்பவர்களிடம் இருந்த குச்சியை வாங்கிய மமதா உடனே உற்சாகமாக இசைக்க ஆரம்பித்தார். மேற்கு வங்க முதல்வரின் எளிமையை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

பொதுவாகவே ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே அரசியல் ரீதியான உரசல்கள் இருக்கும். மேற்கு வங்கத்தில் ஆளுநராக இருக்கும் இல. கணேசன் அழைப்பின் பேரில் சென்னை வந்துள்ள மமதா பானர்ஜி உற்சாகமாக விழாவில் பங்கேற்று செண்டை மேளம் இசைத்துள்ளார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், டி.ஆர். பாலு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications