விஜய் அரசியல் வருகை.. அதிமுக வாக்கு வங்கிக்கு பாதிப்பா.. ஜெயக்குமார் பரபர.. என்ன இப்படி சொல்லிட்டாரு
சென்னை: நடிகர் விஜய் இப்போது புதிதாகத் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில், இது தொடர்பாக அதிமுகவின் ஜெயக்குமார் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் இப்போது புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். கடந்த சில காலமாகவே அவர் அரசியல் கட்சியைத் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், இப்போது அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

"தமிழக வெற்றி கழகம்" என்ற பெயரில் விஜய் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில், இது தொடர்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
புது கட்சி: விஜய் "தமிழக வெற்றி கழகம்" என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த தலைவர்கள் லிஸ்டில் விஜய் இணைந்துள்ளார். எம்ஜிஆர். பாக்கியராஜ், டிஆர், விஜயாகந்த், கமல் எனப் பலரும் அரசியலில் குதித்த போதிலும் வெகு சிலரால் மட்டுமே அதில் தாக்குப்பிடிக்க முடிந்தது. இந்த அரசியலில் விஜய் என்னவாக போகிறார் என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
இதற்கிடையே அரசியல் தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அந்த அறிக்கையில், "தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் "ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களைச் சாதி மத பேதங்கள் வாயிலாகப் பிளவுபடுத்தத் துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.
அறிக்கை: ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகத்திற்கு வழிவகுக்கக்கூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காகக் குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை" என்று அவர் அனைத்து அரசியல் கட்சிகளையும் சாடும் வகையில் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஜெயக்குமார்: இதற்கிடையே விஜயின் அரசியல் வருகை தொடர்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய விஜய், "ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சியை ஆரம்பிக்கலாம்.. சும்மா 10 பேர் சேர்ந்து கூட கட்சியை ஆரம்பிக்கலாம். அதில் மாறுபட்ட கருத்து கிடையாது.
அரசியல் என்பது ஒரு பெருங்கடல்.. அது ஒரு சமுத்திரம் போன்றது.. அந்த சமுத்திரத்தில் நீந்திக் கரைசேரும் நபர்களும் உண்டு.. மூழ்கிப் போகும் நபர்களும் இல்லை. எனவே, இப்போது அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய் மூழ்கிப் போகிறாரா அல்லது நீந்திக் கரை சேர்கிறாரா என்பதைத் தேர்தலில் தான் பார்க்க வேண்டும். யார் வேண்டுமானாலும் கட்சியை ஆரம்பிக்கட்டும். ஆனால், இங்கே மக்கள் தான் எஜமானர்கள். எனவே, கட்சியை யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்.
அதிமுக என்ற கட்சியைக் கட்டுக்கோப்பாகக் காப்பாற்றிய 1.5 கோடி தொண்டர்கள் இருக்கும் கட்சியாக வளர்த்தெடுத்தவர் ஜெயலலிதா. அதேபோல இப்போது எடப்பாடி தலைமையில் 2 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். அதிமுகவின் அடிப்படை வாக்கு வங்கியில் யாராலும் கை வைக்க முடியாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications