வீட்டில் இருந்தே முதல்வர் ஸ்டாலின் நடத்திய அவசர மீட்டிங்.. அடுத்தடுத்து வந்த 3 அதிரடி அறிவிப்புகள்!
சென்னை : கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறை தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து 3 அதிரடி அறிவிப்புகள் வெளியாகின.
முதல்வர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனையில், டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு, புலனாய்வுக்குழு அமைப்பு, அதிகாரிகள் மாற்றம் உள்ளிட்ட அதிரடிகள் அடுத்தடுத்து அரங்கேறியுள்ளன.

கள்ளக்குறிச்சி மாணவி பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்த நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர், உறவினர்கள் குற்றம்சாட்டினர். மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நேற்று முன்தினம் நடந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. இதில் பள்ளி சூறையாடப்பட்டது.

வெடித்த வன்முறை
உயிரிழந்த மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளி வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தி,மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களையும் தீ வைத்து எரித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் டிஐஜி, 2 எஸ்.பி.க்கள் உள்பட 67 போலீஸார் காயமடைந்தனர். இந்த வன்முறையில் 27 பேருந்துகள் உள்பட மொத்தம் 67 வாகனங்கள் கொளுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உளவுத்துறை தோல்வி
பள்ளியில் நடந்த வன்முறைக்குப் பின்னே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திட்டமிடலுடன், சமூக வலைதளத்தில் ஒருங்கிணைத்து செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தகவலை அறிய முடியாமல் உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டதாகவும் அரசு நிர்வாகத்தின் திறனின்மையால்தான் இத்தனை பெரிய அசம்பாவிதம் நேர்ந்தது என்றும் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். கலவரம் நடந்த இடத்தில் போலீசார் எண்ணிக்கை குறைவாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முதல்வர் ஸ்டாலின் நேற்று டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தார். கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பான விவரங்களை முழுமையாக கேட்டறிந்த அவர் இன்று தனது வீட்டிலிருந்தபடியே காணொளி வாயிலாகவே அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

உயர் அதிகாரிகள்
தலைமைச் செயலகத்தில் இருந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலாளர் பனீந்திர ரெட்டி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முக்கிய நடவடிக்கைகள்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சம்பந்தப்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு செய்யப்பட வேண்டிய மாற்று ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, இதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

3 அதிரடி முடிவுகள்
அதன்படி, இந்த ஆலோசனைக்குப் பிறகு 3 அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இந்தப் புலனாய்வுக் குழு, வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கியவர்கள் மற்றும் போலிச் செய்திகளை பரப்பியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வுக் குழு
சேலம் சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநவ் தலைமையில், ஆவடி 5வது பட்டாலியன் காமண்டர் ராதாகிருஷ்ணன், சென்னை பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் கிங்ஸிலின், விழுப்பும் தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால், திருப்பத்தூர் தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துமணிகண்டன், நாமக்கல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரமௌலி ஆகியோர் கொண்ட குழு அமைத்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

எஸ்பி தூக்கியடிப்பு
அதைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளரை மாற்றி உள்துறை செயலர் பனீந்திர ரெட்டி அதிரடியாக உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த செல்வக்குமார் மாற்றப்பட்டு, திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் கள்ளக்குறிச்சி எஸ்.பி ஆக நியமனம் செய்யப்பட்டார்.
Recommended Video

கலெக்டர் மாற்றம்
இதையடுத்து, இன்னொரு அதிரடியையும் மேற்கொண்டது தமிழக அரசு. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜெடாவத் நியமனம் செய்யப்பட்டார். இந்த அறிவிப்பை தமிழக அரசின் தலைமை செயலர் இறையன்பு பிறப்பித்தார். முதல்வரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதன் மூலம் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பான விசாரணை வேகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications