செந்தில் பாலாஜியிடம் 8 நாள் அமலாக்கத்துறை விசாரணை! நீதிமன்றம் போட்ட நிபந்தனைகள்.. இதோ லிஸ்ட்!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 8 நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கி உள்ளது. இது அமலாக்கத்துறைக்கு சாதகமான உத்தரவு எனும் பார்க்கும் அதேவேளையில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தும்போது பின்பற்றப்பட வேண்டிய பல்வேறு நிபந்தனைகளை நீதிமன்றம் அதிரடியாக பிறப்பித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அதன்பிறகு அமமுக சென்று திமுகவில் இணைந்தார். தற்பாது மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்பட்டு வந்தார்.

இதற்கிடையே தான் தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி முறைகேடு செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்த குற்றச்சாட்டில் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதயத்துக்கான ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய காவேரி தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. செந்தில் பாலாஜி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜரான நிலையில் விசாரணை நடத்தப்பட்டு மனு தள்ளுபடியானது. அதோடு செந்தில் பாலாஜியை வரும் 23ம் தேதி வரை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான உத்தரவை நீதிபதி அல்லி பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் தான் செந்தில் பாலாஜியிடம் 8 நாட்கள் அமலாக்கத்துறை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கினாலும் கூட சில முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த நிபந்தனைகளின் விபரங்கள் வருமாறு: சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனையில் இருந்து வெளியே அழைத்து செல்லக்கூடாது. செந்தில் பாலாஜியின் உடல்நிலை, சிகிச்சை முறைகள் பற்றி மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று மருத்துவமனையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். செந்தில் பாலாஜியின் உடல்நலம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு எந்த இடையூறும் இன்றி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
செந்தில் பாலாஜிக்கு போதிய உணவு, இருப்பிடம் வழங்க வேண்டும். மூன்றாம் தர விசாரணை முறையை பயன்படுத்தக்கூடாது. எந்த விதமாகன துன்புறுத்தலும் செய்யக்கூடாது. செந்தில் பாலாஜியை மிரட்டிவோ, அச்சுறுத்தவோ கூடாது. காவலின்போது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு உட்பட்டு செந்தில் பாலாஜியை சந்திக்க அனுமதிக்க வேண்டும். செந்தில் பாலாஜிக்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications