தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான தொகுதிகள் என்னென்ன? திடீர் எண்ட்ரி கொடுத்த ப.சிதம்பரம்!
சென்னை: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான தொகுதிகள் என்னென்ன என டெல்லியில் மிக முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்துள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து சென்ற கே.எஸ்.அழகிரி, செல்லக்குமார், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரிடம் கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவில் முக்கிய பொறுப்பு வகிக்கும் முகுல் வாஸ்னிக் பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதற்கு அவர்கள் தெரிவித்த பதில்களை குறித்து வைத்துக்கொண்டார். அப்போது ப.சிதம்பரம் வீடியோ கால் மூலம் திடீர் எண்ட்ரி கொடுத்ததோடு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலை குறித்து கே.எஸ்.அழகிரியை வைத்துக்கொண்டே மிக ஓபனாக பேசியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பலம் என்ன? பலவீனம் என்ன? , எதிர்க்கட்சிகளின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பது குறித்தும் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் சாதகமான தொகுதிகளின் பட்டியலையும் முகுல் வாஸ்னிக் கேட்டிருக்கிறார். அப்போது அது தொடர்பான விவரங்களை தெரிவித்த அழகிரியிடம் சில சந்தேகங்களையும் முகுல் வாஸ்னிக் கேட்டிருக்கிறார். இதனிடையே தமிழ்நாடு மட்டுமில்லாமல் இதர மாநில காங்கிரஸ் நிர்வாகிகளையும் அழைத்து நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக முகுல் வாஸ்னிக் பேசியிருக்கிறார்.
முகுல் வாஸ்னிக்கை பொறுத்தவரை அவருக்கு தமிழ்நாடு புதிதல்ல, கடந்த காலங்களில் அவர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பொறுப்பாளராக இருந்தவர் என்பதால் தமிழ்நாட்டில் காங்கிரஸின் உண்மையான பலம் பற்றி அறிந்தவராவார். இருப்பினும் இப்போது அது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்திருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி என சேர்த்து காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை அந்த எண்ணிக்கையை 15 வரை அதிகரிக்க விரும்புகிறது. ஆனால் இதற்கு திமுக என்ன பதில் சொல்லப் போகிறது என்பது தான் முக்கியம். ஏனெனில் நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய சறுக்கல், குறிப்பாக ஆட்சியிலிருந்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மாநிலங்களை பாஜகவிடம் இழந்துள்ளது. இதனால் இவைகளை எல்லாம் கணக்கில் கொண்டு தான் திமுக சீட் பங்கீடு நடத்தும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications