மகளிர் உரிமை தொகை திட்டம்: ஒரே வீடுதான்.. மாமியாருக்கு இல்லை, ஆனா, மருமகளுக்கு 1000 ரூபாய்! குழப்பம்
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டம் சில புது வகை குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான தீர்வுகளை அரசு செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மகளிருக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் நேற்று துவங்கி வைத்தார்.

ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் குடும்பங்கள், கார் அல்லது கனரக வாகனங்கள் வைத்திருப்போர், வருடத்திற்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சார நுகர்வு செய்யும் குடும்பங்களில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பது அறிந்ததே.
ஆனால், விதிமுறைகளின்கீழ் உள்ள குடும்பங்களுக்கும் பல பெண்களுக்கு பணம் வந்து சேரவில்லை. வரும் 18ம் தேதிக்குள், இதற்கான காரணம் தெரிவிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதில் திருப்தியில்லாதவர்கள் ஒரு மாதத்திற்குள் இசேவை மையங்கள் மூலமாக மேல்முறையீடு செய்துகொள்ளலாம்.
இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரே வீட்டில் மாமியாருக்கோ அல்லது மருமகளுக்கோ பணம் கிடைத்து, இன்னொருவருக்கு கிடைக்காமல் உள்ளதாம். நெல்லை மாவட்டத்தில் நாம் செய்த கூறெடுப்பு முறையிலான ஒரு சிறிய சர்வேயில் இதுபோன்ற விஷயங்கள் தெரியவந்தன. இதுபோல பல வீடுகளில் நடந்துள்ளது. அது எப்படி ஒரே வீட்டுக்குள் வசிக்கும் இரு பெண்களில் ஒருவருக்கு விதிமுறை முழுமையடைந்தது, இன்னொருவருக்கு விதிமுறை பூர்த்தியாகவில்லை என்ற கேள்விகளை இது எழுப்பியுள்ளது.
இன்னும் சொல்லப்போனால் மாமியார், மருமகள்கள் இடையே உள்வீட்டு உரசலுக்கும் இந்த பாரபட்சமான பணப் பங்கீடு ஒரு காரணமாக மாறியுள்ளது. கணக்கீடு செய்வதில் அதிகாரிகளின் தவறு இருப்பதுதான் ஒரே வீட்டுக்குள் இரு வகை பணப்பட்டுவாடா பிரச்சினைக்கு காரணம் என்று தெரிகிறது. எனவே இதை விரைந்து சரி செய்து "மாமியார்-மருமகள் மற்றும் குடும்ப ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு" அரசுக்கு உள்ளது.
இதுதவிர மேலும் பல நடைமுறைச் சிக்கல்களும் இந்த திட்டத்தில் உள்ளது. மினிமம் பேலன்ஸ் இல்லை என்று கூறி, வங்கிகளே வந்த பணத்தை எடுத்துவிடும் சம்பவங்களும் நடந்துவருகின்றன. இதனால் பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜன்தன் யோஜனா வங்கிக் கணக்கிற்கு இதுபோல மினிமம் பேலன்ஸ் கெடுபிடி இல்லை. பிற கணக்குகளை பொறுத்தளவில், கிராமம், நகரம் போன்ற பகுதிகளுக்கு ஏற்ப இவ்வளவு மினிமம் பேலன்ஸ் அவசியம் என்று ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு வகை கெடுபிடிகளை வைத்துள்ளன. எனவே மக்கள் அவசரமாக மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. அல்லது, கைக்கு எட்டுவது வாய்க்கு எட்டாத கதையாக மாறிவிடும்.












Click it and Unblock the Notifications