ஆரம்பித்தது ஆர்த்தி.. திடீரென தனக்கு தெரியாது என அறிக்கை.. ஜெயம் ரவிக்கு "லீகல்" சிக்கல்!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் தன்னுடைய விவாகரத்து குறித்து அறிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது அவரின் மனைவி ஆர்த்தி ரவி, விவாகரத்து பற்றி தன்னிடம் ரவி எதுவும் சொல்லவில்லை. என்னிடம் ஆலோசனை செய்யாமல் விவாகரத்து பற்றி அறிவித்துள்ளதாக ஆர்த்தி ரவி புகார் வைத்துள்ளார். இந்த நிலையில் ஜெயம் ரவிக்கு இனி சட்ட பூர்வமாக என்ன மாதிரியான வாய்ப்புகள் உள்ளன என்று பார்க்கலாம்.
நடிகர் ரவி தன்னுடைய விவாகரத்து அறிவிப்பில்., வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது.
என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

விவாகரத்து: நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.
இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே.
நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன், நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன், எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி என்று நடிகர் ரவி கூறியுள்ளார்.
ஆர்த்தி ரவி பதில்: இந்த நிலையில் தற்போது அவரின் மனைவி ஆர்த்தி ரவி, விவாகரத்து பற்றி தன்னிடம் ரவி எதுவும் சொல்லவில்லை. என்னிடம் ஆலோசனை செய்யாமல் விவாகரத்து பற்றி அறிவித்துள்ளதாக ஆர்த்தி ரவி புகார் வைத்துள்ளார். அதில், சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன்.
இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன்.
என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல....
ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன். ஆனால் என் மீது குற்றம் சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் என் குழந்தைகளின் நலனும், எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது.
மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் இவற்றை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது. தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய கடமை.
காலம் நடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன். இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இத்தனை காலமாக எங்களுக்கு ஆதரவு மட்டுமன்றி நல்வழி காட்டி வரும் பத்திரிக்கை ஊடக மற்றும் ரசிகப் பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே என்னையும் என் குழந்தைகளையும் இந்த காலகட்டத்தில் தூணாக காத்து நிற்கும். இந்த சோதனையில் இருந்து நாங்கள் மீண்டு வர உங்கள் பிரார்த்தனைகள் துணை நிற்க வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
லீகல் வாய்ப்புகள்: இந்த நிலையில் ஜெயம் ரவிக்கு இனி சட்ட பூர்வமாக என்ன மாதிரியான வாய்ப்புகள் உள்ளன என்று பார்க்கலாம். பொதுவாக விவாகரத்தில் இரண்டு தரப்பின் சம்மதத்தோடு நடக்கும் விவாகரத்து, ஒரு தரப்பு மட்டும் தாக்கல் செய்யும் விவாகரத்து என்ற இரண்டு வகை உள்ளது. இதில் ஜீவனாம்சம் என்ற அலிமோனி கேட்கும் விவாகரத்து வகையும் உள்ளது.
இதில் ஜெயம் ரவி mutual அதாவது இரண்டு தரப்பின் சம்மதத்தோடு நடக்கும் விவாகரத்து கேட்கவில்லை. இதனால் விவாகரத்து கிடைப்பது கடினம் . இதுபோன்ற விவகாரங்களில் இரண்டு தரப்பிற்கும் நோட்டீஸ் அனுப்பப்படும். அதில் விளக்கம் அளிப்பதோடு கவுன்சிலிங் செல்ல வேண்டி இருக்கும்.
அதோடு ஒரு தரப்பு மட்டும் விவாகரத்து கேட்டால் கவுன்சிலிங் சென்று.. அதன்பின்பும் விவாகரத்தில் உறுதியாக இருந்தால் மனைவி தரப்பு அலிமோனி கேட்க முடியும். ஆனால் ஒரு தரப்பு மட்டும் விவாகரத்து கேட்டால் விவாகரத்து கிடைக்க தாமதம் ஆகும். ரவி மனைவி ஜீவனாம்சம் பெறுவதற்காக திடீரென இப்படி குழப்பம் ஏற்படுத்துவதாக சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். ஏனெனில ஜெயம் ரவி மனைவிதான் சில வாரங்கள் முன்பிருந்தே தனது கணவரோடு இருந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கினார். ஆனால் இப்போது தனக்கு எதுவுமே தெரியாது என்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications