நகரங்களைவிட.. கிராமங்களில் "சூப்பர் ரிச்" பணக்காரர்கள் அதிகரிக்க காரணம் என்ன தெரியுமா? மக்களே ரெடியா
சென்னை: ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் இந்தியாவில் இப்போது பெரும் பணக்காரர்கள் (Super Rich) வளர்ச்சி விகிதம் நகரங்களைவிடவும், கிராமப்புறங்களில் (Rural) அதிகமாக உள்ளது. ஆண்டுக்கு ரூ.2 கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களைதானே சூப்பர் ரிச் என்போம், அது ஊரக பகுதிகளில் அதிகரிக்கிறதா என சிலருக்கு வியப்பு ஏற்படகூடும். ஆனால் ஆய்வு முடிவு அதையே சொல்கிறது.
2021ம் ஆண்டு புள்ளிவிவரப்படி நாட்டில் இருக்கும் சூப்பர் பணக்காரர்களின் எண்ணிக்கை 18 லட்சம். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் இந்த சூப்பர் ரிச் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. மும்பை, சென்னை, பெங்களூர், டெல்லி என நகரங்களை நோக்கிய கண்கள், கேரளாவின் மலப்புரம் போன்ற சிறு டவுன்களை பார்க்க தொடங்கியுள்ளன. மலப்புரம் அடைந்துள்ள வளர்ச்சி இந்தியாவில் பலரும் அறியாததாக உள்ளது.

பிபிள் ரிசர்ச் என்று அமைப்பு நடத்திய ஆய்வின்படி, 2030ல் இந்தியாவில் இருக்கும் சூப்பர் பணக்காரர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரிக்கும் எனவும், இத்தகைய சூப்பர் குடும்பங்களின் வளர்ச்சி நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப் புறங்களிலேயே அதிகமாக உள்ளது எனவும், கிராமங்களில் 14.2% ஆகவும், நகரங்களில் 10.6% ஆகவும் இந்த வளர்ச்சி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் கிராமப்புறங்களில், நகரங்களை விட, பெரும் பணக்காரர்களின் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. சில முக்கிய காரணங்கள் இவைதான்..
விவசாயத் துறையின் வளர்ச்சி: இந்தியா ஒரு விவசாய நாடு. இந்தத் துறை சமீபத்திய ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வருகிறது. இது விவசாயிகள் மற்றும் பிற விவசாயத் தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. விவசாய கூலிகளின் சம்பள உயர்வை இதற்கு ஒரு உதாரணமாக கூற முடியும். தக்காளி சாகுபடி செய்த விவசாயி லட்சாதிபதியான செய்தியை சமீபத்தில் கூட படித்திருப்பீர்கள். இது கிராமப்புற பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு காரணமாகி வருகிறது.
கிராமப்புற தொழில் முனைவோர்: சமீப ஆண்டுகளில் கிராமப்புற இந்தியாவில் தொழில்முனைவோர் அதிகரித்து வருகிறார்கள். இது புதிய தொழில்களை உருவாக்க வழிவகுத்துள்ளது. விவசாயம் மட்டுமின்றி, கற்களை உடைக்கும் தொழிற்சாலை, ஐஸ் தொழிற்சாலை என ஏரியாவுக்கு தக்க இப்போதைய இளைஞர்கள் தொழில் தொடங்கி ஜொலித்து வருகிறார்கள்.

அரசு திட்டங்கள்: மத்திய அரசு நீண்ட காலமாகவே கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் பல திட்டங்களைத் தொடங்கி வந்துள்ளது. இந்த திட்டங்கள் இப்போது பலன் தர ஆரம்பித்துள்ளன. இது பல கிராமப்புற குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த உதவியது. கிராமப்புற இளைஞர்களுக்கு அதிக தேவையுள்ள திறமைகளில் பயிற்சி அளிக்கும் பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY) மற்றும் கிராமப்புறங்களில் சாலைகளை அமைக்கும் பிரதான் மந்திரி கிராமின் சடக் யோஜனா (PMGSY) ஆகியவை இதுபோன்ற திட்டங்களில் அடங்கும். நகரங்களுக்குள் உள்ள சாலைகளைவிட பல கிராமங்களில் சாலைகள் அருமையாக உள்ளன.
டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சி: இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது, மேலும் இது கிராமப்புற மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. பல கிராமப்புற தொழில்முனைவோர் இப்போது டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விற்பனை செய்கிறார்கள். சிறு டவுன் பகுதிகள் வரை ஆன்லைன் டெலிவரி சேவை விரிவடைந்துவிட்டதால் நகரத்தில்தான் வசித்து வியாபாரம் செய்ய தேவையில்லை. தங்கள் வணிகங்களை வளர்க்கவும் இது உதவியது. எனவே, கிராமப்புற இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியப் பொருளாதாரத்தில் பல சாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. ஏனெனில் அதிக முதலீடு, வேலை உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications