தமிழகத்தின் முதல் ஏசி புறநகர் ரயில்! சென்னை டூ செங்கல்பட்டு இடையே இன்று இயக்கம்! கட்டணம் எவ்வளவு?
சென்னை: சென்னை- செங்கல்பட்டு வரை செல்லும் ஏசி புறநகர் மின்சார ரயில் முதல் முறையாக இன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய ரயில் சேவை சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையே பயணிக்கிறது.
சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணித்து வருகிறார்கள். இவை எல்லாம் ஏசி வசதி இல்லாத ரயில்கள்தான். ஏசி வசதி கொண்ட ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்ற ரயில்வே, ஏசி வசதியுடன் கூடிய மின்சார ரயிலை தயாரித்தது. கடந்த மார்ச் மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதில் சிறு சிறு தொழில்நுட்ப கோளாறுகள் இருந்தன, அவை சரி செய்யப்பட்டன.
தமிழகத்தின் முதல் ஏசி புறநகர் ரயில்
அந்த வகையில் தமிழகத்தின் முதல் ஏ.சி. புறநகர் மின்சார ரயில் சேவை இன்று முதல் தொடங்கிய நிலையில் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர். இந்த புதிய ரயில் 12 பெட்டிகளை கொண்டுள்ளன. இதுவரை ஏசி வசதியில்லாத சாதாரண வகை மின்சார ரயில்களே சென்னை- செங்கல்பட்டு வரை இயக்கப்பட்டு வந்தன.
பயணிகள்
ஆனால் பயணிகளின் கோரிக்கையை ஏற்று தற்போது முதல் ஏசி மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இதில் குளிர்சாதன வசதிகள், அடுத்த ரயில் நிலையத்தை அறிவிக்கும் வசதி, தானியங்கி கதவுகள் உள்ளிட்டவை உள்ளன.

110 கி.மீ. வேகம்
இந்த ரயிலில் 1,116 பேர் அமர்ந்தும், 3,798 பேர் அமர்ந்தும் பயணிக்கலாம். இந்த ஏசி ரயிலானது அதிகபட்சமாக 110 கி.மீ. வேகத்தில் செல்லும்.
ஏசி மின்சார ரயில்
முதலில் இந்த ஏசி மின்சார ரயில் தாம்பரம் பணிமனையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்படும். காலை 6.45 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும். இதன்பிறகு சென்னை கடற்கரையில் இருந்து காலை 7.00 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்துக்கு 7.48 மணிக்கும், செங்கல்பட்டுக்கு காலை 8.45 மணிக்கும் சென்றடையும்.

சென்னை கடற்கரை டூ செங்கல்பட்டு
தேபோன்று சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 3.45, இரவு 7.35 மணிக்கு புறப்படும் ஏசி மின்சார ரயில், தாம்பரத்துக்கு மாலை 4.20, இரவு 8.30 மணிக்கும், செங்கல்பட்டுக்கு மாலை 5.25 மணிக்கு சென்றடையும். சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் தாம்பரம் வரை மட்டும் செல்லும்.
மறுமார்க்கம்
இதேபோன்று மறுமார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து காலை 9.00 மணி, மாலை 5.45 மணிக்கு புறப்படும் ஏசி மின்சார ரயில்கள், தாம்பரத்துக்கு காலை 9.38 மணி, மாலை 6.23 மணிக்கும், சென்னை கடற்கரைக்கு காலை 10.30 மணி, இரவு 7.15 மணிக்கும் செல்லும்.

கடற்கரை- தாம்பரம் இடையே நின்று செல்லும்
சென்னை புறநகர் பாதையில் ஏசி மின்சார ரயில் பயணிக்கும் போது, வழக்கமாக சாதாரண ரயில்களில் உள்ளது போலவே கடற்கரை - தாம்பரம் இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.
12 இடங்களில் நிறுத்தம்
தாம்பரத்தில் இருந்து அதிகாலையில் கடற்கரைக்கு புறப்படும் போதும், இரவில் கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு வரும் போதும் இந்த ரயில்கள் புறநகர் பாதையில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் செல்லும் போது, கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் ஆகிய 12 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கட்டணம் என்ன
ஞாயிற்றுக்கிழமை இந்த ரயில்கள் இயக்கப்படாது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை மட்டும் தான் இந்த சேவைகள் இயக்கப்படும். இந்தக ரயிலில் அதிகபட்சமாக ரூ 105 கட்டணமும் குறைந்தபட்சமாக ரூ 35 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
அதிகபட்சம் ரூ 105
சென்னை கடற்கரை டூ செங்கல்பட்டுக்கு ரூ 105 கட்டணமாகவும், தாம்பரம் டூ செங்கல்பட்டிற்கு ரூ 85 கட்டணமாகவும், தாம்பரம்-எழும்பூருக்கு ரூ 60 கட்டணமாகவும் செங்கல்பட்டு டூ எழும்பூருக்கு ரூ 85 கட்டணமாகவும் வசூலிக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications