கேரளாவை அலறவிடும் ஜேஎன்.1 கொரோனா வைரஸ்.. அறிகுறிகள் என்ன தெரியுமா? மக்களே உஷார்
சென்னை: கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்பது ஜேஎன்.1 வகை கொரோனா வைரஸ் தான். இந்நிலையில் தான் ஜேஎன்.1 வகை கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் என்னென்ன? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்தியா உள்பட உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் அடுத்தடுத்து பரவியது. இதனால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். அதோடு மக்கள் கொத்து கொத்தாக பலியாகினர்.

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த உலகமும் முடங்கியது. பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. மேலும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதையடுத்து 2 ஆண்டுகள் கழித்து 2021ல் உலகம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது 2021ல் குறைய தொடங்கியது. இதையடுத்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இத்தகைய சூழலில் தான் தற்போது கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இன்றைய நிலவரப்படி கேரளாவில் கொரோனாவால் 292 பேர் பாதிக்கப்பட்டனர். 3 பேர் பலியாகி உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கேரளாவில் 2,041 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனர். இத்தகைய நிலையில் அங்கு கொரோனா பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைள் என்பது தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, தமிழ்நாட்டில் இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்பது எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளா எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு என்பது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணம் என்பது ஜேஎன்.1 வைரஸ் தான். அதாவது ஓமிக்ரான் வகை வைரஸின் புரதத்தில் திரிபு பெற்ற பைரோலா மாறுபாட்டால் (BA.2.86) இந்த வைரஸ் உருவானது. இது முதல் முதலில் ஐரோப்பிய ஒன்றியமான லக்சம்பர்க்கில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு பல நாடுகளுக்கும் பரவியது. தற்போது இந்த வைரஸ் இந்தியாவில் பரவ தொடங்கி உள்ளது.
இந்த ஜேஎன்.1 வைரஸ் தான் கேரளா உள்பட இந்தியாவை அச்சுறுத்த தொடங்கி உள்ளது. இதற்கிடையே தான் ஜேஎன்.1 கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் என்னென்ன? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை புண், தலைவலி உள்ளிட்டவை அறிகுறிகளாக உள்ளன. இதுதவிர பெரும்பலான நோயாளிகள் சுவாச சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். இந்த பிரச்சனை 4 முதல் 5 நாட்கள் வரை நீடிக்கும்.
மேலும் பசியின்மை, குமட்டல் உடல் சோர்வு, தசையில் பலவீனமாக உணர்வது உள்ளிட்டவையும் இந்த கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகளாக இருக்கின்றன. இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பொதுமக்கள் அருகே உள்ள மருத்துவரை சந்தித்து பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜேஎன்.1 கொரோனா வைரஸ் என்பது வேகமாக பரவும் தன்மை கொண்டது. இதனால் பொதுமக்கள் அறிகுறிகள் இருப்பினும் அலட்சியம் காட்டாமல் தனிமைப்படுத்தி உரிய சிகிச்சையை பெற வேண்டும் என டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications