அரண்மனை போல வீடு.. 38 ஏசி, 10 பிரிட்ஜ் + 8376 புத்தகங்கள்..ஜெ. இல்லத்தில் இருப்பது என்ன? முழு விவரம்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் அரசுடமையாக்கப்பட்டு அந்த தகவல் அரசிதழில் வெளியாகியுள்ளது.
அரசிதழில் வெளியாகியுள்ள தகவலில், ஜெயலலிதா இல்லத்தில் எந்த மாதிரியான பொருட்கள் உள்ளன, எத்தனை பொருட்கள் உள்ளன என்பது குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த பொருட்களை வைத்து பார்க்கும்போது போயஸ் இல்லம் மிகப்பெரிய பங்களா என்பதை சாமானிய மக்களும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

பெரிய அறைகள், பல ஏசிக்கள்
போயஸ் இல்லத்தில் மட்டும் 38 ஏசிக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அங்குள்ள பல அறைகள் மிகப் பெரியவை. எனவேதான், ஒரே அறைக்கு கூட பல ஏசிக்கள் தேவைப்பட்டுள்ளன என்கிறார்கள். இதேபோலத்தான் வீட்டில் 11 டிவிக்களும், 10 பிரிட்ஜ்களும் இருந்துள்ளன. முழு பட்டியலையும் பார்த்தால் போயஸ் இல்லம் ஒரு அரண்மனை போன்ற வாழ்க்கை முறையை கொண்டது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

தங்கம், வெள்ளி
14 வகையான மொத்தம் 4 கிலோ 372 கிராம் எடையுள்ள, தங்கம், 601 கிலோ மற்றும் 424 கிராம் எடையுள்ள 867 வகையான வெள்ளிப் பொருட்கள், 162 சிறிய வெள்ளி பாத்திரங்கள் போயஸ் இல்லத்தில் உள்ளன. இவைதான் இருப்பதிலேயே விலை மதிப்புள்ள பொருட்கள்.

டிவி, பிரிட்ஜ், ஏசி
இதுதவிர, நாம் ஏற்கனவே குறிப்பிட்டதை போல, 11 தொலைக்காட்சிப் பெட்டிகள், 10 பிரிட்ஜ் , 38 ஏசிக்களும் உள்ளன. கிச்சென் ரேக் தவிர மற்ற பர்னிச்சர்கள் 556 உள்ளன. தட்டு, டம்ளர் உட்பட கிச்சன் பாத்திரங்கள் 6514 இருக்கின்றன.

பர்னிச்சர்
கிச்சன் ரேக் மற்றும் பர்னிச்சர் 12,055 உள்ளன. பூஜை பொருள்கள் 15, டவல், பெட்ஷீட், தலையணை உறைகள் உள்ளிட்ட ஆடை சார்ந்த பொருட்கள் 10 ஆயிரத்து 438 உள்ளன. தொலைபேசி மற்றும் மொபைல் போன் 29 உள்ளன. கிச்சன் எலக்ட்ரிக்கல் ஐட்டங்கள் 221, எலெக்ட்ரிகல் உபகரணங்கள் 251 உள்ளன.

புத்தகங்கள்
8376 புத்தகங்கள், 394 நினைவு பரிசுகள், 108 வகை காஸ்மெடிக் ஐட்டம்கள், ஜெராக்ஸ் மிஷின் 1, லேசர் பிரிண்டர் 1, ஸ்டேஷனரி ஐட்டம்ஸ் 253. ஆக மொத்தம் 32 ஆயிரத்து 721 பொருட்கள் அதில் உள்ளன. இதில் 8376 புத்தகங்கள் இருப்பது கவனிக்கத் தக்கதாக உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர்களான, அறிஞர் அண்ணா, கருணாநிதி போன்றோரின் வாசிப்பு மற்றும் எழுத்தாற்றல் அனைவரும் அறிந்தது. ஆனால், ஜெயலலிதா இந்த அளவுக்கு வாசிப்பு பழக்கம் உள்ளவரா என்பது பலரும் அறியாத தகவலாக உள்ளது. சிலரோ இது பரிசாக வந்த புத்தகங்களாக இருக்கலாம் என்கிறார்கள். ஆனால், பிற்காலகட்டத்தில், ஜெயலலிதா வாசிப்பு பழக்கத்தை அதிகரித்துக் கொண்டவர் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications