இந்த போட்டோவை பாருங்க.. இதில் நடந்த இரண்டே தவறுதான்.. இந்தியா கூட்டணியின் தலையெழுத்தே மாறியது
சென்னை: இந்த இரண்டு தவறுகள் நடக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி நிச்சயம் இன்றைக்கு ஆட்சியை எளிதாக பிடித்திருக்கும். அதை பற்றி இப்போது பார்ப்போம்.
2014, 2019 தேர்தலில் வென்று பல மாநிலங்களில் ஆட்சியில் அமர்ந்து அசுர பலத்துடன் இருக்கும் பாஜகவை மொத்தமாக இணைந்து சந்தித்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்கிற நிலை 2023ல் இருந்தது. இதை உணர்ந்த எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக மிகப்பெரிய கூட்டணி அமைக்க முடிவு செய்தன. காங்கிரஸ் இந்தியா கூட்டணி அமைத்தது என்பதை விட காங்கிரஸ் சுமந்து கொண்டாவது இந்தியா கூட்டணியை அமைக்க வேண்டும் என்று விரும்பியது மாநில கட்சிகள் தான். அதுவும் கூட்டணியை உருவாக்க விரும்பியதே நிதீஷ்குமாரும், மம்தா பானர்ஜியும் தான்.

இன்னொரு முக்கியமான விஷயம்.. 2024 லோக்சபா தேர்தல் என்பது நிச்சயம் பாஜகவிற்கும் காங்கிரஸ் கட்சிக்குமான தேர்தல் கிடையாது. பலவீனமான நிலையில் இருந்த காங்கிரஸை தூக்கி கொண்டு சுமந்து சிப்பாய்கள் போல் முன்னேறி செல்ல விரும்பிய மாநில கட்சிகளுக்கும் பாஜகவிற்கும் இடையேயான யுத்தம் தான் இது. இந்த யுத்த களத்தில் பாஜக வென்றதா, மாநில கட்சிகள் வென்றதா என்று பார்த்தால் நிச்சயம் மாநிலக்கட்சிகள் தான் வென்றுள்ளன. ஆனால் மாநில கட்சிகளால் ஆட்சியை கைப்பற்ற முடிந்ததா என்றால் நிச்சயம் இல்லை.
மிகவும் அசுர பலத்துடன் இருந்த பிரதமர் நரேந்திர மோடியை தனித்தனியாக நின்று வீழ்த்துவது என்பது மிகவும் எளிதான காரியம் அல்ல என்பதை எதிர்க்கட்சிகள் உணர்ந்தன. அவர்கள் உணர்ந்தபடி மிக சரியாக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து கூட்டணி அமைத்தது எல்லாம் சரியாகத்தான் நடந்தது.. அந்த கூட்டணியின் தளபதிகளாக இருந்த நிதிஷ்குமார் கடைசி நேரத்தில் கைவிட்டு விட்டு சென்றதும், வேண்டாம் காங்கிரஸ் எனக்கு என்று கூறி மம்தா பானர்ஜி தனித்து போட்டியிட்டதும் தான் இந்தியா கூட்டணி எளிதாக ஆட்சிக்கு வர முடியாமல் போக காரணமாக அமைந்தது.
ஏனெனில் மேற்கு வங்கத்தில் பாஜக 12 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இதேபோல் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இதேபோல் பாஜகவும் பீகாரில் 9 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
தமிழ்நாட்டை போல் பீகாரில் 40 இடங்களிலும், மேற்கு வங்கத்தில் 42 இடங்களில் மொத்தமாக இந்தியா கூட்டணி வென்றிருந்தால், நிச்சயம் இப்போது வாங்கியுள்ள எண்ணிக்கையை விட 36 முதல் 40 இடங்களில் கூடுதலாக வென்றிருக்க வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்திருந்தால் இந்தியா கூட்டணி இப்போது முன்னணியில் உள்ள 234 என்பது 274 ஆக மாறியிருக்கும். பிற கட்சிகள் ஆதரவுடன் எளிதாக ஆட்சி அமைத்திருக்க முடியும்.
இதில் என்ன ஒரு ஆச்சரியமான உண்மை என்றால் இந்தியா கூட்டணியை உருவாக்க தளபதிகள் போல் செயல்பட்டவர்கள் என்றால் மம்தா பானர்ஜியும், நிதீஷ்குமாரும் தான் .. இருவரும் சேர்ந்து இந்தியா கூட்டணியில் பயணித்து இருந்தால் நிலைமையே வேறாக இருந்திருக்கும்.
அதேபோல் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் பாஜகவிற்கு முன்பு காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்திருந்தாலும் நிலைமை இந்தியா கூட்டணிக்கு சாதகமாக முடிவுகள் வந்திருக்கும்.. ஆனால் இதை காங்கிரஸ் தலைவர்கள் செய்யவில்லை என்பதே எதார்த்தமான உண்மை. தெலுங்குதேசம், ஜேடியு, பிஜேடி (ஓடிசா), திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்டட மாநில கட்சிகள் எல்லாமே இந்தியா கூட்டணியில் சேர்ந்திருந்தால் நிச்சயம் பாஜகவிற்கு வெற்றிக்கான வாய்ப்பு இந்த முறை மிக கடினமாகி இருக்கும்.. அதாவது எல்லா மாநிலக்கட்சிகளும் விருப்பு வெறுப்பை மறந்து இணைந்திருந்தால் மட்டுமே வெற்றி சாத்தியமாகியிருக்கும்.
இப்போதும் கூட இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க ஒரு வாய்ப்பு உள்ளது. அதற்கு அதிகப்படியான விலையை இந்தியா கூட்டணி கொடுக்க வேண்டியதிருக்கும். பாஜக ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகள் ஆதரவு தேவை. மாநில கட்சிகளாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஒருவேளை இந்தியா கூட்டணியை ஆதரித்தால் நிச்சயம் களம் மாறிவிடும். ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல என்பதே எதார்த்தமான உண்மை. ஏதாவது மேஜிக் நடந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம்.












Click it and Unblock the Notifications