"துண்டு" போட்டாச்சு போலயே.. ஸ்டாலின் ரூமில் ஓபிஎஸ் மகன்.. சீக்ரெட் "நாத்".. காரணமே "அவர்" தானாமே
எம்பி ரவீந்திரநாத், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச காரணம் என்ன தெரியுமா
சென்னை: முதல்வர் ஸ்டாலினை, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தனியாக சந்தித்து பேசியதன் அதிர்வு இன்னும் அடங்கவில்லை.. இது பல்வேறு யூகங்களை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video
மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் 10-க்கும் மேற்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து நடத்தப்படும் திட்டங்கள் குறித்த வளர்ச்சி பற்றி ஆராய்வதற்கு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.
இதில் தமிழகத்தில் உள்ள எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பலரும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்த கமிட்டியின் கூட்டம் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது.
ஸ்டாலின் ரூமில் காலடிவைத்த ஓபிஎஸ் மகன்.. முதல்வரை தனியாக சந்தித்த ரவீந்திரநாத்.. என்ன காரணம்?
திருமாவளவன்
விசிக தலைவர் திருவமாவளவன், காங்கிரஸ் திருநாவுகரசர் மற்றும் அதிமுக எம்.பி.க்கள் ரவீந்திரநாத், நவநீதகிருஷ்ணண், அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் கலந்து கொண்டனர். இதில் முதல்வர் பேசும்போது, "இந்த ஆட்சி அமைந்தபோதே நான் குறிப்பிட்டு ஒன்றை சொல்லி இருந்தேன்.. இது என்னுடைய அரசு கிடையாது.. நம்முடைய அரசு என்று சொன்னேன்.. நம்முடைய அரசு என்ற பரந்த உள்ளத்தோடு நீங்கள் எல்லாரும் இங்கே வந்துள்ளது மகிழ்ச்சி.. நம் மாநிலத்துக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற ஆலோசனைகளை சொல்லுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.
எம்பி ரவீந்திரநாத்
இந்த கூட்டம் முடிந்ததுமே, முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலகத்திலுள்ள தன்னுடைய அலுவலகத்துக்கு சென்றுவிட்டார்.. அப்போது தேனி எம்பி ஓ.பி. ரவிந்திரநாத்தும், அதே அலுவலகத்தில் முதல்வரை தனியாக சந்தித்து பேசினார்... பாரதியார் கவிதைகள் புத்தகத்தை முதல்வருக்கு எம்பி ரவீந்திரநாத் பரிசாக அளித்தார்.. தொடர்ந்து, தேனி மக்களவை தொகுதிக்கான மற்ற கோரிக்கைகள் குறித்த மனுவை முதல்வரிடம் அளித்தார்..
ஜெயலலிதா
தொகுதிகளுக்கான கோரிக்கை குறித்த மனுவை முதல்வரிடம் ஒரு எம்பி வழங்குவது என்பது இயல்பான விஷயமே என்றாலும், அதையும் மீறி சலசலப்பும் முணுமுணுப்புகளும் நேற்று முதல் எழுந்தவாரியாகவே உள்ளது.. காரணம், திமுக அரசை ரவீந்திரநாத் மனமார பாராட்டினாராம்.. "தமிழக மக்கள் நலனில் மிகுந்த அர்ப்பணிப்போடு செயல்பட்டு வரும் தங்களுக்கும், தங்கள் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வரும் சுகாதாரத் துறைக்கும் பாராட்டுகள்" என்றும் பிரத்யேகமாக தன்னுடைய மனுவில் கூறினாராம் ரவீந்திரநாத்.
பின்னணியில் ஓபிஎஸ்
இதைதவிர இன்னொரு விஷயமும் தற்போது கசிந்துள்ளது.. முதல்வருக்கு பாரதியார் புத்தகத்தை ரவீந்திரநாத் தந்தார் இல்லையா... அந்த புத்தகத்தை செலக்ட் செய்து கொடுத்தது ஓபிஎஸ் தானாம்... அதுமட்டுமல்ல, ஆலோசனைக் கூட்டம் முடிந்ததுமே, ஸ்டாலினை தனியாக சந்தித்து, மாவட்ட பிரச்சனைகள் குறித்து மனு கொடுக்க அறிவுறுத்தியவரும் ஓபிஎஸ் தானாம்... அதன்படியே ஸ்டாலினை சந்தித்தாராம் நாத்...
ஹைலைட்
இதைவிட இன்னொரு ஹைலைட் நடந்துள்ளது.. அந்த சந்திப்பின்போது, "அப்பா எப்படி இருக்கிறார்?" என்று ஸ்டாலின் நலம் விசாரித்தாராம்.. அதற்கு நாத், "கோவையில் ஆயூர்வேத சிகிச்சையில் இருக்கிறார். சிகிச்சை முடிந்து நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகிறார்" என்று சொல்லியிருக்கிறார் ரவீந்திரநாத். இதற்கிடையே, தனது தொகுதி சார்ந்த பிரச்சனைகள் குறித்து கோரிக்கை மனு கொடுத்திருந்தாலும், ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ் தொடர்பான சில பிரச்சனைகளை ரவீந்திரநாத் பேசிவிட்டு வந்திருப்பதாக அதிமுக வட்டாரங்களில் கிசு கிசுக்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி
இந்த விஷயம் தெரிந்துதான் அதிமுக தரப்பில் டென்ஷன் எகிறி உள்ளதாம்.. ஏற்கனவே அதிமுகவில் இடியாப்ப சிக்கல் உள்ளது.. ஓபிஎஸ்ஸை ஆரம்பத்தில் இருந்தே, மேலெழுந்துவிடாமல் எடப்பாடி பழனிசாமி டாமினெட் செய்து வருவதாக கூறப்படும் நிலையில், பொதுச்செயலாளர் பதவிக்கும் எடப்பாடி, குறி வைத்து வருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.. இதற்கு நடுவில் சசிகலா என்ன செய்ய போகிறார் என்றே இதுவரை புரியாத சூழலில், ரவீந்திரநாத் முதல்வரை தனியாக சந்தித்ததும், இதற்கு பின்னணியில் ஓபிஎஸ் இருப்பதாக முணுமுணுப்புகள் எழுந்துள்ளதும், வேறு ஏதோ ஒரு "கணக்கை" போட துண்டுகிறது.. என்ன நடக்க போகிறதோ தெரியவில்லை.. பார்ப்போம்..!