செல்போனில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன? திருப்புவனம் அஜித் குமாரின் சகோதரர் நவீன் பேட்டி
சென்னை: திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவரது குடும்பத்தினருக்கு அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் அஜித் குமாரின் தாயார் மற்றும் சகோதரர் நவீனிடம் தொலைபேசியில் பேசினார். முதல்வர் ஸ்டாலின் தன்னிடம் என்ன பேசினார் என்பது குறித்து அஜித் குமாரின் சகோதரர் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதை இங்கு பார்ப்போம்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தை சேர்ந்த இளைஞர் அஜித் குமார் காவல்துறை விசாரணையின் போது அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

அஜித் குமார் தாயிடம் பேசிய ஸ்டாலின்
போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித் குமார் வீட்டுக்கு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும், சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளருமான பெரியகருப்பன் நேற்று சென்றார். அங்கு அஜித் குமாரின் தாயார் மாலதி மற்றும் சகோதரர் நவீன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவர் தனது செல்போன் மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலினை தொடர்பு கொண்டு அஜித் குமாரின் தாயார் மற்றும் தம்பி இருக்கிறார்கள் என்று கூறினார்.
பின்னர் தனது செல்போனை அஜித் குமார் தாயாரிடம் கொடுத்து முதல்வர் பேசுகிறார் என்று கூறி கொடுத்தார். அவரிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், "வணக்கம்மா, ரொம்ப சாரிம்மா... தைரியமா இருங்கள். நான் தீவிரமான நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறேன். உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ? அதை செய்து தர சொல்கிறேன். அமைச்சர் பார்த்துக் கொள்வார். தைரியமாக இருங்கள்.. தைரியமாக இருங்கள்.. நடக்க கூடாதது நடந்து விட்டது" என்று கூறி ஆறுதல் கூறினார்.
கஷ்டப்பட்டு வளர்த்த பிள்ளை சார்
பின்னர், அஜித் குமாரின் சகோதரர் நவீனுக்கு மு.க ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அவர் பேசும்போது, 'வணக்கம் தம்பி. நடக்க கூடாதது நடந்துவிட்டது. தைரியமாக இருங்கள். நான் நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறேன். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமோ, அதை மாவட்ட அமைச்சர் மூலம் செய்ய சொல்கிறேன். தைரியமாக இருங்கள். நடந்த சம்பவத்துக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அனைவரையும் கைது செய்துவிட்டோம். தைரியமாக இருங்கள். உங்களுக்கு என்ன பண்ண வேண்டுமோ, அதை செய்து தர சொல்கிறேன். இதை யாராலும் கேட்டுக்கொண்டு விட்டுவிட முடியாது. அவர்களுக்கு என்ன தண்டனை வாங்கி கொடுக்க முடியுமோ, வாங்கி கொடுத்து விடுவோம்' என்றார். அப்போது முதல்வரிடம் பேசிய நவீன், "விசாரணைக்கு கூட்டிட்டு போயிட்டு இந்த மாதிரியெல்லாம்.. 29 வயது பையன் சார். எங்க அப்பா சின்ன வயதிலேயே இறந்து விட்டார். ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்த பிள்ளை சார் அவன்" என்று கண்கலங்கியபடி நவீன் கூறினார்.
ஸ்டாலினிடம் நவீன் கூறியது என்ன?
இந்த செல்போன் உரையாடலின்போது, நவீனிடம் நீங்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று ஸ்டாலின் கேட்டார். அதற்கு அவர், 'நான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன்' என்று கூறினார். இதற்கிடையே, முதல்வர் பேசியது குறித்து நவீன் கூறுகையில், "நிரந்தர வேலை வேண்டும் என கோரிக்கை வைத்தேன் செய்து தருவதாக முதல்வர் கூறினார். இறந்தது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
நடந்தது எல்லாம் எனக்கு தெரியும், உங்களுக்கு என்ன செய்து தரணுமோ.. தருகிறேன் என முதல்வர் பேசினார். அமைச்சரும் இரண்டு நாட்களில் வருவதாக சொன்னார். வேலையை தவிர எந்த கோரிக்கையும் வைக்கவில்லை" என்றார். இதற்கிடையே, அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை இன்று அமைச்சர் பெரியகருப்பன் நவீனிடம் வழங்கினார். நேற்று முதல்வரிடம் அஜித் குமாரின் சகோதரர் நவீன் கோரிக்கை வைத்த நிலையில் மறுநாளே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications