அங்கே அமித் ஷா.. எஸ்பி வேலுமணியை சந்தித்த நிர்மலா சீதாராமன்.. இதான் காரணமா? விளக்கும் அதிமுக மாஜி!
சென்னை : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் - அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது பற்றி பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் கூட இல்லாத நிலையில், அதற்குள்ளாக தேர்தல் வியூகங்களை வகுப்பது குறித்து இன்று பேசப்பட்டதாக கூறியுள்ளார் வைகைச்செல்வன்.
கூட்டணி நகர்வுகள் தொடர்பாக நடைபெற்ற மரியாதை நிமித்தமான சந்திப்புத்தான் இது என வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

எஸ்பி வேலுமணி - நிர்மலா சீதாராமன்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார். பாஜக - அதிமுக இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல்கள், அதைத் தொடர்ந்து சலசலப்புகள் நிலவி வந்த சூழலில், தமிழ்நாட்டில் அதிமுக உடனான கூட்டணி தொடரும் என்று அமித்ஷா கூறியிருந்தார். பின்னர் இதே கருத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரதிபலித்து இருந்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவரான எஸ்.பி வேலுமணி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முக்கியத்துவம்
சென்னை வந்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லி புறப்பட்டார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவரைச் சந்தித்துப் பேசினார் எஸ்பி வேலுமணி. அதற்கு முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதிமுக - பாஜக இடையே கூட்டணி உரசல்கள் இருந்த நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

வைகைச்செல்வன்
அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், "ஏற்கனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக - அதிமுக கூட்டணி தொடர்கிறது எனத் தெரிவித்துவிட்டார். அதற்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது பாஜக பலவீனமாக இருக்கும் மாநிலங்களில் பலம்வாய்ந்த கட்சிகளோடு கூட்டணி அமைத்துள்ளோம். அந்தவகையில் தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்றார். ஆக, இதில் இருந்து அதிமுக - பாஜக் கூட்டணி தொடர்வது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மரியாதை நிமித்தம்
2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி இப்போது வரை கூட்டணி தொடர்கிறது. இதற்கிடையே சிறு சிறு சச்சரவுகள், இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்கள் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், கூட்டணி உறுதி என்பதை தலைமை உறுதி செய்திருக்கிறது. இந்நிலையில் தான் அதிமுக சட்டமன்ற கொறடா எஸ்.பி.வேலுமணி, சென்னை வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்திருக்கிறார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு.

தேர்தல் வியூகம்
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் கூட இல்லை. குறுகிய காலமே உள்ள நிலையில், அதற்குள்ளாக தேர்தல் வியூகங்களை வகுக்க வேண்டும். கூட்டணி குறித்த அடுத்தகட்ட நகர்வுகளை செய்ய வேண்டும். அதுகுறித்து நடைபெற்ற மரியாதை நிமித்தமான சந்திப்புத்தான் இது என்ற தகவல் கிடைத்திருக்கிறது." என வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications