திமுக தப்பிச்சிடுச்சு.. எடப்பாடி அப்படி சொன்னதும்.. அறையில் இருந்தவர்கள் சிரிக்க.. கலகல ராயப்பேட்டை
சென்னை: அதிமுக தொடங்கப்பட்டு 52 ஆண்டுகள் முடிந்து 53-வது ஆண்டு இன்று துவங்குகிறது. இதற்காக சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. தலைமையகம் வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், பொன்னையன், எஸ் .பி. வேலுமணி, பொள்ளாட்சி ஜெயராமன், தமிழ்மகன் உசேன், வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள், மகளிர் அணியினர் உற்சாகமான வரவேற்பை அளித்தனர்.

'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' இன்று களைகள் எடுத்த தோட்டமாய் செழித்து நிற்கிறது. "வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு"
என்ற வள்ளுவரின் அறிவுரையை மறக்கலாமா? வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை. ஆனால், நண்பர்கள் போல் இருந்து உட்பகை கொண்டவர்களின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும் என்று எத்தனை ஆழமான அறிவுரையை வள்ளுவப் பேராசான் நமக்குத் தந்திருக்கிறார். உட்பகை கொண்டவர்கள் இனி நம் இயக்கத்திற்கு வேண்டாம் என்பதில் உறுதியோடு நிற்போம்.
கழக உடன்பிறப்புகளே, "நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" என்ற வைர வரிகள் நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
இன்னும் 1½ ஆண்டுகளில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் வர இருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சியை, புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சியை மலரச் செய்வதற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவுதர மக்கள் தயாராகிவிட்டார்கள். நமது தோட்டத்தில் களைகள் நீங்கி பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கிறது. பொன்னான வசந்த காலம் நம் கண்ணெதிரே தெரிகிறது.
எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும், 2026-ல் கழகத்தின் ஆட்சி அமைந்திடுவதை எந்த சக்தியும் தடுத்துவிட முடியாது. அதற்கு, எந்த ஒரு தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். உங்களின் உயர்வுக்காகவும், கழகத்தின் வெற்றிகாகவும் என்னையே அர்ப்பணித்து உழைத்து வருகிறேன்., என்றும் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டு இருந்தார்.
நினைவுகளை பகிர்ந்து கொண்டார் எடப்பாடி: இன்றைய நிகழ்வில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அலுவலகத்தில் அமர்ந்து மூத்த தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் எடப்பாடி. அப்போது, தனது இளமைக்கால அரசியல் குறித்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார் எடப்பாடி. அவர் ஆரம்பித்ததும், ஒவ்வொருவரும் அதிமுகவோடு தங்களுக்கிருந்த உணர்வுகளைச் சொல்லி சிலாகித்தனர்.
சென்னை மா.செ.க்களிடம் மழை, வெள்ளம் குறித்து ஜெயக்குமாரிடமும், வளர்மதியிடமும் கேட்டார் எடப்பாடி. அதற்கு ஜெயக்குமார், வானிலை மையம் அறிவித்திருந்த ரெட் அலெர்ட் படி செவ்வாய் இரவும், புதன் கிழமையும் மழை பொழிந்திருந்தால் அப்போதுதான் திமுக அரசின் உண்மையான நிர்வாக சீர்கேடுகள் தெரிந்திருக்கும். மழை வராததால் திமுக அரசு நிர்வாகம் தப்பித்துக்கொண்டது. கடந்த ஆண்டு மழை நீர் அதிகம் தேங்கிய பகுதிகளில் மட்டும் இந்த முறை கவனம் செலுத்தினார்கள்.
எதிர்பார்த்தப்படி மழை கொட்டியிருந்தால் ஸ்டாலின் நிம்மதியாக தூங்கியிருக்க முடியாது என்று விவரித்திருக்கிறார் ஜெயக்குமார். அப்போது, "வெள்ளை அறிக்கைக் கேட்டால், தண்ணீர் நிக்கலைல்லே... அதுதான் வெள்ளை அறிக்கைன்னு உதயநிதி சொல்றாரு. விளையாட்டுத்துறை அமைச்சர்ங்கிறதினால இன்னமும் விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்காரு " என்று எடப்பாடி கமெண்ட் பண்ண, எல்லோரும் சிரித்திருக்கிறார்கள்.
சீனியர்கள் மற்றும் ம.செ.க்களுடன் ஆலோசித்ததில், மாவட்டம் வாரியாக பொதுக்கூட்டம் நடத்துவது, தமிழகம் முழுவதும் எடப்பாடி சுற்றுப்பயணம் செல்வது உள்ளிட்ட விசயங்கள் பேசப்பட்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications