டெல்லி வரை போன ரிப்போர்ட்.. அந்த பங்களா யாருடையது? செந்தில் பாலாஜி ரெய்டில் அதிகாரிகள் கேட்ட கேள்வி
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டின் போது கரூரில் கட்டப்பட்டு வரும் புதிய வீடு ஒன்றை பற்றியும் அதிகாரிகள் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூர், கோவை என்று தமிழ்நாட்டின் கொங்கு மண்டலமும், சென்னையில் கிரீன் வேஸ் சாலையும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் ரெய்டு காரணமாக பரபரப்பில் மூழ்கி உள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற பெரிய ரெய்டுகளில் ஒன்றாக செந்தில் பாலாஜி வீட்டில் நடக்கும் வருமான வரித்துறை ரெய்டு பார்க்கப்படுகிறது. மொத்தம் 1000 அதிகாரிகள் இந்த ரெய்டில் களமிறக்கப்பட்டு உள்ளனர்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள், அவரின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் நடக்கும் ரெய்டுகள் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு முழுக்க 200க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடக்கிறது.
முக்கியமாக ரெய்டு நடக்கும் இடங்களில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிராக போர்கொடி தூக்கி உள்ளனர். முக்கியமாக கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் அதிகாரிகள் சோதனையிட சென்ற போது பெண் அதிகாரியிடம் கரூர் மாநகராட்சி கவிதா கணேசன் உள்ளிட்டவர்கள் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 22 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் மட்டும் 26 இடங்களில் சோதனை நடக்கிறது.

காரணம் என்ன? :
இந்த ரெய்டிற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டின் போது கரூரில் கட்டப்பட்டுவிட்டு வரும் புதிய வீடு ஒன்றை பற்றியும் அதிகாரிகள் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூரில் ஒரு புதிய வீடு கட்டி வருகிறார் செந்தில் பாலாஜி என்று கூறப்படுகிறது. அந்த பங்களாவில் செய்ய வேண்டிய ஒவ்வொரு பணிகளையும் ஒவ்வொரு முக்கிய நபர்களிடம் பொறுப்பினை கொடுத்துள்ளார் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பிரமாண்ட பங்களா குறித்து ஏற்கனவே கவர்னரின் கவனத்துக்கு சிலர் கொண்டு போயிருக்கின்றனர். முக்கியமாக பாஜகவினர் பலர் இது செந்தில் பாலாஜியின் பங்களா என்று அடித்து சொல்கின்றனர். அது தொடர்பாக ஆளுநரிடம் புகாரும் கொடுத்து உள்ளனராம். அது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் இரு வாரங்களுக்கு முன்பு டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்த ரெய்டில் அந்த பங்களா குறித்த விபரங்களும் வருமானவரித்துறையினரால் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறதாம். அந்த பங்களா யாருடையது.. உண்மையில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமானதா என்று அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

செந்தில் பாலாஜி விளக்கம்:
இந்த ரெய்டு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த விளக்கத்தில், எனது இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடைபெறவில்லை,. இது போன்ற சோதனைகளை நாங்கள் எதிர்கொள்வது புதிதல்ல. 2006 தொடங்கி ஒரு சதுர அடி நிலத்தை கூட நானோ, எனது குடும்ப உறுப்பினர்களோ வாங்கவில்லை, அதுபோன்ற நடவடிக்கையில் எப்போதும் ஈடுபடமாட்டோம்.
எனது சகோதரர் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி அதிகாரிகள் உள்ளே சென்ற வீடியோ எனக்கு வந்துள்ளது, அதை பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும். எத்தனை நாட்கள் சோதனை நடத்தினாலும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்புத் தரப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications