நிர்மலா சீதாராமனுக்கு வந்த கோபம்! செல்வப்பெருந்தகைக்கு போனை போட்ட ராகுல்? தமிழக காங்கிரஸில் பரபரப்பு
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுக்கு, தமிழக காங்கிரஸ் பதிலளித்திருக்கிறது.
கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து தனியார் ஊடகத்திடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது திமுக அரசையும், காங்கிரஸையும் கடுமையாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

ராகுல் காந்தி: இந்த விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். இதற்கெதிராக காங்கிரஸ் ஒரு வார்த்தை கூட பேசாதது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எங்கே? ராகுல் காந்தி எங்கே? கள்ளச்சாராயத்தால் பட்டியலினத்தவர்கள் இறக்கும் போது, ராகுல் காந்தியிடம் இருந்து எந்த அறிக்கையும் வருவதில்லை என்று காட்டமாக கூறியிருந்தார்.
ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கள்ளக்குறிச்சி விஷயத்தில் சிபிஐ விசாரணை தேவை என்று கேட்டிருந்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இதே கருத்தை வலியுறுத்தியிருந்ததுடன், காங்கிரஸையும் சீண்டியிருந்தார்.
கண்டனம்: இதையடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தார்.. தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் சிபிஐ விசாரணை கேட்கலாம். ஆனால், அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது.. நிர்மலா சீதாராமன் இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குகிறார்.
பொறுப்புள்ள அமைச்சர் இதை அரசியல் ஆக்காமல், இனிவரும் காலங்களில் இந்த மாதிரி சம்பவங்கள் நிகழாமல் இருக்க ஆலோசனை வழங்கலாம்... ஒட்டுமொத்த தமிழ்நாடும் பாஜகவை புறக்கணித்துவிட்ட நிலையில், ஏதாவது காரணங்களை வைத்து எப்படியாவது அரசியல் செய்ய முடியுமா? என்றே அவர் பார்க்கிறார். ஆனால் அது எடுபடாது என்று கூறியிருந்தார் செல்வப்பெருந்தகை.
செல்வப்பெருந்தகை: இந்நிலையில், மீண்டும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு செல்வப்பெருந்தகை பதிலளித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்திபவனில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர், "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக இதுவரை, கார்கேயும், ராகுலும் பேசவில்லை என்று நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
சம்பவம் நடந்த அன்றைய தினமே, மூத்த தலைவர்கள் கார்கே, ராகுல் 2 பேருமே தொலைபேசி வாயிலாக என்னை தொடர்பு கொண்டனர். பாதிக்கப்பட்டு, உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, தேவையான உதவிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள்.. பெற்றோரை இழந்த, 45 குழந்தைகளின் படிப்பு செலவை, காங்கிரஸ் ஏற்கும் என்றும் அறிவிக்கும்படியும் கூறினார்கள்.
அண்ணாமலை: கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக, சட்டசபை மற்றும் மக்கள் மன்றத்தில் காங்கிரஸ் போராடி வருகிறது. மாநில அரசின் அனுமதி இல்லாமல், சிபிஐ விசாரணை நடத்த இயலாது. இந்த அடிப்படை அரசியல் அறிவு இல்லாதவராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருக்கிறார். மலிவான அரசியல் மேற்கொள்வதில் முதன்மையானவர் அண்ணாமலைதான்...
போராட்டம் நடத்துவது அரசியல் கட்சிகளின் உரிமை. அதற்கான அனுமதியை போலீஸ் துறைதான் வழங்க வேண்டும். அனுமதி வழங்காமல் இருப்பது குறித்து, சட்டசபையில் பேசுவேன்" என்றார் செல்வப்பெருந்தகை.












Click it and Unblock the Notifications