"இயற்கை விவசாயம்.." வந்து விழுந்த கேள்வி.. யோசிக்காமல் பட்டுனு சொன்ன வெற்றிமாறன்! என்ன சொன்னார்
சென்னை: தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் வெற்றிமாறன், இயற்கை விவசாயம் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன்.. இவர் ஆடுகளம், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களுமே ஹிட் அடித்துள்ளது.
இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விடுதலை திரைப்படம் தமிழ்நாடு முழுக்க பேசுபொருள் ஆன நிலையில், அடுத்ததாக இப்போது அவர் விடுதலை 2 பணிகளில் இறங்கியுள்ளார். சூரி நடிப்பில் உருவாகும் இந்த விடுதலை 2 படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
இயக்குநர் வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் எப்போதும் பெரும்பாலும் ஹீரோக்களுக்கே பெரிய ரசிகர் பட்டாளமும் மார்கெட்டும் இருக்கும். இயக்குநர்களுக்கு எனத் தனியாகப் பெரியளவில் ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். தமிழில் பெரும் ஹீரோக்களை வைத்து ஹிட் கொடுத்த பலரை நாம் குறிப்பிடலாம். வெகு சில இயக்குநர்களுக்கு மட்டுமே தனியாக ரசிகர் கூட்டம் இருக்கும். அப்படி தனக்கென ரசிகர்களை வைத்திருப்பவர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் ஹிட் அடித்துள்ளது.

மேலும், இவர் இயற்கை விவசாயத்திலும் அதீத ஆர்வம் கொண்டிருக்கிறார். தனது வீட்டிற்கு அருகே தனியாக ஒரு இடத்தை வாங்கி அங்கே இயற்கை விவசாயம் செய்து வருகிறார். கடந்த காலங்களில் இவர் பல இடங்களில் இயற்கை விவசாயம் குறித்தும் பேசியுள்ளார். இதற்கிடையே இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெற்றிமாறன், இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
இயற்கை விவசாயம்: தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்க விழாவில் கலந்து கொண்ட வெற்றிமாறனிடம் ஒருவர், "விவசாயம் என்பது போய்விட்டது. இன்று நாம் விஷத்தைத் தான் சாப்பிட்டு வருகிறோம். இன்றைய காலத்தில் விவசாயம் மற்றும் இயற்கை விவசாயம் என இரண்டாகப் பிரிந்துள்ளது. இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த வெற்றிமாறன், "இன்றைய சூழலில் மருந்து போட்டுச் செய்யும் விவசாயம் தான் இருக்கிறது. பூச்சிக்கொல்லிகள், உரம் இல்லாமல் உலகில் அனைவருக்கும் தேவையான உணவை உற்பத்தி செய்ய முடியாது என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எலைட் மக்கள்: இன்றைய காலகட்டத்தில் இயற்கை விவசாயம் என்பது எலைட் மக்களுக்கானதாக இருக்கிறது. மாட்டுச்சாணியை உரமாக போட்டு எல்லாம் நமது விவசாயம் இயற்கையானதாகவே இருந்துள்ளது. ஆனால், இப்போது தான் எலைட் மக்களுக்கானதாக மாறிவிட்டது. அதை அனைவருக்குமானதாக மாற்ற வேண்டும். இதற்கு நாம் அனைவரும் சேர்ந்து பெரியளவில் உழைக்க வேண்டி இருக்கிறது.
ஏனென்றால் 10 பேர் நிலம் வைத்திருக்கிறார்கள் என்றால் அதில் 10ஆவதாக இருப்பவர் நிலத்திற்கு உறத்தை போட்டாலும் எனது நிலத்தையும் சேர்த்துப் பாதிக்கும். இது மெல்லத் தான் மாறும். அரசு இதில் ஆதரவாக இருந்தால் மட்டும் அனைவரும் சேர்ந்து இந்த மாற்றத்தைச் செய்து காட்ட முடியும். அதேநேரம் மருந்தைப் போடுவதாலேயே அனைத்து விஷயங்களையும் கெடுதல் என ஒதுக்கிவிட முடியாது. மருந்து போடுவதால் நல்லது என அனைத்தையும் ஏற்றுக் கொள்ளவும் முடியாது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications