சந்தடி சாக்கில் இது ஒரு காமெடி! "ஜம்ப்" அடிக்கும் 10 எம்எல்ஏ? எடப்பாடியை விட்டு விளாசிய ஸ்டாலின்!
சென்னை: சந்தடி சாக்கில் எடப்பாடி பழனிசாமி காமெடி செய்து கொண்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கிண்டலாக விமர்சனம் செய்து வருகிறார்.
அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் திமுக பக்கம் செல்ல போவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றனஎம்பி செந்தில் குமார் கூட இது தொடர்பாக இரட்டை இலை எமோஜி வைத்து குறிப்பாக ட்விட் ஒன்றை போட்டு இருந்தார்.
அதன்படி 3 எம்எல்ஏக்கள் விரைவில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க போவதாக கூறப்படுகிறது. கோவையை சேர்ந்த 10 அதிமுக எம்எல்ஏக்களில் 3 பேர் முதல்வர் ஸ்டாலினை பார்த்து திமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பார்கள்.
இது அதிமுக வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

எடப்பாடி பழனிசாமி பதில்
இந்த நிலையில்தான் இது பற்றிய கேள்விக்கு சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி காட்டமாக பதில் அளித்தார். எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், திமுகவின் எம்எல்ஏக்கள் எங்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். திமுக எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். மொத்தம் 10 திராவிட முன்னேற்ற கழக எம்எல் ஏக்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக எம்எல்ஏக்கள் 10 பேர் தங்கள் பக்கம் வரப்போவதாக அவர் பேசினார்.

ஸ்டாலின் பதில்
எடப்பாடியின் இந்த பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில், முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில், கடந்த தேர்தலில் திமுகவை வெற்றிபெற வைத்த மக்களுக்கு நன்றி. ஆனால் இந்த ஆட்சி வாக்களித்த மக்களுக்கு மட்டும் அல்ல. வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் இந்த ஆட்சி. இவர்களுக்கு வாக்களித்ததில் மகிழ்ச்சி என்று வாக்களித்த மக்கள் நினைக்க வேண்டும். வாக்களிக்காத மக்கள்.. இவர்களுக்கு வாக்களிக்காமல் போய்விட்டோமே என்று நினைக்கும் அளவிற்கு ஆட்சியை சிறப்பாக செய்து வருகிறோம். செய்வோம்.

ஆட்சி மதிப்பெண்
நம்முடைய நல்ல ஆட்சிக்கு கிடைத்த மதிப்பெண்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றி. நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். மீதம் உள்ள வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம். ஆட்சிக்கு வந்ததில் இருந்து தீவிரமாக உழைத்துக்கொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறேன். போகிற வழி எல்லாம் மக்கள் என்னை வரவேற்கிறார்கள்.

நம்பிக்கை மனுக்கள்
ஆயிரக்கணக்கில் மக்கள் என்னை சந்தித்து நம்பிக்கையாக மனுக்கள் கொடுக்கிறார்கள். அந்த நம்பிக்கை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த நம்பிக்கைக்கு எப்போதும் உரியவனாக இருக்கிறேன். திமுக ஆட்சி வலுவாக இருக்கிறது. நாங்கள் இப்படி ஆட்சி செய்து இருக்கிறோம். இந்த சந்தடி சாக்கில் ஒரு காமெடி. நீங்கள் சோசியல் மீடியாவில் கூட பார்த்து இருப்பீர்கள். திமுக எம்எல்ஏக்கள் எங்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று காமெடி செய்கிறார் எடப்பாடி.

எடப்பாடி
எடப்பாடி பழனிசாமியுடன் அவரின் எம்எல்ஏக்களே பேசுவது இல்லை. உங்கள் எம்எல்ஏக்களே உங்களுடன் பேசுவது இல்லை. அப்படி இருக்கும் போது எங்கள் எம்எல்ஏக்கள் அவருடன் பேசுவதாக புருடா விட்டுக்கொண்டு இருக்கிறார். ஜெயலலிதா மறைவிற்கு பின் எந்த தேர்தலில் அந்த கட்சி வெற்றிபெறவில்லை. அதிமுகவே பிளவுபட்டு உள்ளது. இப்போது அவர் இருக்கும் பதவி தற்காலிக பதவி.

நிரந்தர பதவி
அவர் இருப்பது நிரந்தர பதவி கிடையாது. அப்படி இருக்கும் போது அவர் மற்ற கட்சி பற்றி பேசலாமா? மற்ற கட்சி பற்றி விமர்சனம் செய்யலாமா? நானும் அரசியல் செய்கிறேன். நானும் உயிரோடு இருக்கிறேன் என்பதை காட்டுவதற்காக அவர் இப்படி எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார். நாம் எதை பற்றியும் கவலைப்பட வேண்டியது இல்லை, என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications