அமித் ஷா சொல்லியும் எடப்பாடி கேட்கல.. ஓபிஎஸ் என்கிட்ட போனில் சொன்னார்.. போட்டு உடைத்த தினகரன்!
சென்னை : 2021 தேர்தலின்போது, கூட்டணியில் அமமுகவை சேர்க்க வேண்டும், இல்லையென்றால் 80 தொகுதிகளில் பாதிப்பு ஏற்படும் என அமித் ஷா கூறியும், எடப்பாடி பழனிசாமிதான் மறுத்துவிட்டதாக ஓபிஎஸ் என்னிடம் போனில் தெரிவித்தார் என போட்டு உடைத்துள்ளார் டிடிவி தினகரன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பின்போது அடுத்தகட்ட அரசியல் நகர்வு மற்றும் முக்கிய விஷயங்கள் குறித்து, டிடிவி தினகரனுடன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆலோசனை நடத்தினர்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்புக்கு பின்னர், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இருவரும் இணைந்து செயல்பட முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் - தினகரன் கூட்டணி அடுத்தடுத்த நகர்வுகளைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஓபிஎஸ் உடனான சந்திப்பு குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். அப்போது, ஓபிஎஸ் தன்னிடம் முன்னரே போனில் பேசிய தகவலையும் தினகரன் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அமமுகவை கூட்டணியில் சேர்க்கலாம் என்று பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார். அமமுகவை கூட்டணியில் சேர்க்காவிட்டால் 80 தொகுதிகளில் பின்னடைவை ஏற்படுத்தும் என அனைவரும் தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும், எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு மறுத்துள்ளார். இந்தத் தகவலை ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசியில் என்னிடம் கூறினார் எனத் தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன்.
மேலும், "எடப்பாடி பழனிசாமி துரோகி, சுயநலனுக்காகத்தான் தலைமை பதவியில் இருக்க வேண்டும் என நினைக்கிறார். பணம் இருக்கும் தைரியத்தால் தவறான செயல்களில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி கூட்டத்திடம் நியாயம் இல்லை, உண்மை இல்லை. எங்களிடம் உண்மை இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வமும் நானும் சுயநலத்துக்காக, பலவீனமாக இருக்கிறோம் என்பதால் இணையவில்லை.
ஜெயலலிதாவின் கொள்கை மற்றும் ஆட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் அமைக்கும் முயற்சியில்தான் இணைந்திருக்கிறோம். ஓ.பி.எஸ் உடனான சந்திப்பு குறித்து சசிகலாவிடம் நான் எதுவும் பேசவில்லை. ஓபிஎஸ் சசிகலாவுடன் பேசி இருப்பதாக அவரே சொன்னார். பிரிந்து கிடக்கும் அதிமுக இணைவதற்கு எடப்பாடி பழனிசாமிதான் தடையாக இருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications