எடப்பாடி சொன்னது பொய்! 6 பேர் சந்திக்கவில்லையா? 6 மாதம் மவுனம் ஏன்? லக்ஷ்மணன் கேள்வி
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் தன்னை சந்தித்து கட்சி ஒன்றிணைப்பது பற்றிப் பேசியதாகப் பத்திரிகையாளர் சொன்னது முழுக்க பொய் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில், அதற்கு எஸ்.பி.லக்ஷ்மணன் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுகவின்53 ஆம் ஆண்டு விழா தொடர்பாக அறிக்கைவிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, '2026இல் ஆட்சி அமைப்பதற்காக எந்தத் தியாகத்தையும் செய்ய தயார்' என்று தெரிவித்திருந்தார். அந்த வார்த்தையை வைத்து ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வார் என்றே அர்த்தம் எடுத்துக்கொண்டனர்.

ஆனால், அதற்கான வாய்ப்பே இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதை வைத்துப் புரிந்துகொள்ள முடிந்தது. அண்ணாமலை பல விமர்சனங்களை வெளிப்படையாக வைத்த போது மவுனமாக இருந்த எடப்பாடி, திமுகவில் வாரிசு அரசியல் நடக்கிறது என்று நேரடியாக உதயநிதியை விமர்சித்தார். சீனியர்கள் பலர் இருக்கும்போது இவருக்கு ஏன் துணை முதல்வர் கொடுத்தார்கள் என்று கேட்டவர் அதிமுகவில் ஒரு விவசாயி கூட முதல்வராக முடியும். ஒரு சாதாரண தொண்டனும் முதலமைச்சராக வர முடியும். ஆனால், திமுகவில் கருணாநிதி குடும்பத்தில் ஒரு ஆண் வாரிசு பிறந்துவிட்டாலே அவர்கள்தான் வழிவழியாக முதல்வராக வருவார்கள் என்றுபேசி இருந்தார்.
இதற்குப் பதிலளித்த உதயநிதி செங்கோட்டையன் போன்ற சீனியர்கள் இருக்கும்போது எடப்பாடி எப்படி முதல்வரானார் என்று கேட்டுவிட்டு, கூவத்தூர் விவகாரத்தைச் சுட்டிக்காட்டி இருந்தார். இதை மறுக்கும் வகையில், 'அதிமுகவில் 50 ஆண்டுகளாக இருக்கிறேன். உதயநிதியின் வயதே என் அனுபவத்தைவிடக் குறைவு' என்றும் பேசி இருந்தார். கடந்த 5 மாதங்கள் முன்னதான எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் 6 முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து கட்சி ஒற்றுமை பற்றி வலியுறுத்தியதாகப் பேச்சு அடிபட்டது. அதற்கு இதுவரை பதிலளிக்காமல் மௌனமாக இருந்த எடப்பாடி, தன்னை 6 பேர் சந்திக்கவில்லை என்றும் பத்திரிகையாளர் சொல்வது பச்சைப் பொய் என்றும் சொல்லி இருந்தார். அந்த 6 பேர் பேட்டிக் கொடுப்பார்களா? என்றும் கேட்டிருந்தார்.
இந்தச் சந்திப்பை பற்றி முதலில் போட்டு உடைத்தவர் பத்திரிகையாளர் எஸ்.பி.லக்ஷ்மணன்தான். எடப்பாடி பத்திரிகையாளர் எனச் சொன்னதும் இவரைத்தான். இந்நிலையில் எடப்பாடி பேச்சு பற்றி லக்ஷ்மணன் விளக்கம் அளித்திருக்கிறார். அவர், "அந்த ஆறு பேர் யார் என்பது உலகம் அறிந்த ரகசியம். சரி, எடப்பாடி சொல்வதைப் போல அந்த 6 பேட்டி கொடுக்கவில்லை. ஆனால், இதுவரை அந்த 6 பேர் சந்திக்கவே இல்லை என்று மறுத்தார்களா? செங்கோட்டையன் பேட்டிக் கொடுத்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி சந்திப்பு பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதில் சொல்லாமல் சிரித்துவிட்டு, கடந்து போனார். அதற்கு என்ன அர்த்தம்?
எடப்பாடி பேட்டி கொடுக்கும்போது வேலுமணியும் நத்தம் விஸ்வநாதனும் நின்றார்கள். அவர்கள் ஆமாம். எடப்பாடி பழனிசாமி சொல்வது உண்மைதான். அந்த 6 பேரில் எங்கள் பெயரும் அடிபடுகிறது. நாங்கள் அப்படிச் சந்தித்துப் பேசவே இல்லை என்று வலுசேர்ப்பதைப் போல பேசி இருக்கலாமே? ஏன் பேசவில்லை? ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி. அவரை மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் பல விசயங்களுக்காகச் சந்திக்கலாம். 'ஆமாம். பலரும் சந்தித்தார்கள். ஆனால், அதைப் பற்றி பேசவில்லை' என்று தன்னம்பிக்கையுடன் அவர் மறுத்திருக்கவேண்டும். அதைவிட்டுச் சந்திப்பே பொய் எனச் சொன்னது அரசியல் பிழை. அதற்கு இன்னும் சில மாதங்களில் பதில் கிடைக்கும்.
இந்தச் சர்ச்சை நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. அதை எப்போது மறுத்திருக்கவேண்டும்? டிவியில் விவாதம் நடந்தது. பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதின. இவ்வளவு காலம் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது சந்திப்பே பொய் என்கிறார். நான் இப்போது சொல்கிறேன். எடப்பாடி பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பின் 4 முன்னாள் அமைச்சர்கள் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள். எடப்பாடியைப் பதவியில் அமர வைத்தது தவறு என்று விவாதித்திருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.

அடுத்து திமுகவில் வாரிசு அரசியல் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசியதற்குப் பதிலளிக்க முன்வந்த லக்ஷ்மணன், "வாரிசு அரசியல் பற்றி மக்கள் பெரியதாகக் கவலைகொள்வதில்லை. வாரிசாக வரும் நபர் மக்களிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்பதைத்தான் கவனிப்பார்கள். உதயநிதிக்கு இளைஞரணி பதவி கொடுத்த போதே ஒரு விமர்சனம் எழுந்தது. வெள்ளக்கோயில் சாமிநாதனிடம் ராஜினாமா கடிதம் முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொண்டுதான் அவருக்குப் பதவி கொடுத்தது திமுக. அதுகூட உட்கட்சி விவகாரம். ஆனால், உதயநிதிக்கு எம்.எல்.ஏ சீட்டு கொடுத்த போதுதான் அதைப் பற்றி பொதுமக்கள் பேச தொடங்கினார்கள். அப்படி இருந்தும் அவர் வெற்றிபெற்றார். மக்கள் அவரை அங்கீகரித்துவிட்டார்கள். ஒன்றரை வருடங்களில் அமைச்சரானார். இப்போது துணை முதல்வராகி இருக்கிறார்.
ஒரு பத்திரிகையாளராக என் பார்வையில் இளைஞரணி பதவியை வாங்கி வைத்துக்கொண்டு அவர் சும்மா இல்லை. அதற்காக வேலைகளைச் செய்தார். அமைச்சரான பிறகும் கூட அவர் தன் அதிகார தோரணையை வெளியே காட்டவில்லை. வேண்டிய அளவில் அவர் வேலை செய்து வருகிறார். வாரிசு அரசியல் என்பதால் அவர் பதவியை வாங்கிக் கொண்டு ஊட்டியில் ரூம் போட்டு சொகுசாக தூங்கவில்லை. அவர் மீது அப்படியான விமர்சனம் இதுவரை வரவில்லை. ஆகவே, எடப்பாடி சொல்வதைப் போல வாரிசு அரசியல் பற்றி மக்கள் அதிகம் கவலைப்படப் போவதில்லை. அது இனிமேல் எடுபடாத வாதம்.
அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வராக வர முடியும் என்கிறார் எடப்பாடி. ஆனால், உண்மை என்ன? அதிமுகவில் பொதுச்செயலாளராகப் போட்டியிட வேண்டும் என்றாலே 10 பேர் முன்மொழிய வேண்டும், 10 பேர் வழிமொழிய வேண்டும் என்று கட்சி விதியை திருத்தி வைத்திருக்கிறார். இது தான் சுதந்தரமா? இது தான் ஜனநாயகமா? "என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications