"அதிமுக நிச்சயம் போட்டியிடாது.. பாஜகவை ரொம்ப ஈஸியா வெல்வோம் பாருங்க.." ஈவிகேஎஸ் இளங்கோவன் நம்பிக்கை
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தேர்தலில் பெரிய சவால் இருக்காது என்றும் காங்கிரஸ் எளிதாக வெல்லும் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் திருமகன் ஈவேரா.. கடந்த ஜன.4ஆம் தேதி திருமகன் ஈவேரா திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் சமீபத்தில் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அத்துடன் சேர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தல்
ஈரோட்டில் வரும் பிப்ரவரி 27இல் இடைத்தேர்தல் நடக்கிறது. வரும் மார்ச் 2இல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையடுத்து தமிழ்நாடு அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் போட்டியிட்டதால், இந்த முறையும் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.. வரும் ஜன. 31ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில், காங்கிரஸ் சார்பில் கடந்த இரு நாட்களாக வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடந்தது.

காங்கிரஸ் வேட்பாளர்
இதனிடையே நேற்றைய தினம் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன், மத்திய இணை அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எனக் கடந்த காலங்களில் பல முக்கிய பதவிகளில் இருந்துள்ளார். இதனிடையே வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் பல முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னையில் மணப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், "என் மீது நம்பிக்கை வைத்து காங்கிரஸ் மேலிடம் என்னை வேட்பாளராக அறிவித்துள்ளது. எனது இளைய மகனை வேட்பாளராக அறிவிக்குமாறு நான் கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், என் மீது இருக்கும் நம்பிக்கையில் என்னை வேட்பாளராக அறிவித்துள்ளனர். இதற்காக நான் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதியைக் காங்கிரஸுக்கு ஒதுக்கிய திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு நன்றி.

சவால் இருக்காது
நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை அடைவேன். இந்த இடைத்தேர்தலில் அதிமுகவில் இருக்கும் நான்கு அணிகளுமே போட்டியிடாது என்றே நான் கருதுகிறேன்.. அங்கு பாஜகவே வேட்பாளரை நிறுத்தும் என நினைக்கிறேன். அப்படி பாஜக அங்கு வேட்பாளராக நிறுத்தினால் மிக எளிதாக திமுக கூட்டணி வெல்லும். காங்கிரஸ் சார்பில் வேட்பாளரை அறிவிக்கும் முன்னரே, திமுக அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பைத் தொடங்கிவிட்டனர். இதற்காகவும் நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

எளிதில் வெல்லும்
இடைத்தேர்தலில் போட்டி எப்படி இருக்கும் என்ற செய்தியாளர் கேள்விக்குப் பதிலளித்த அவர், "இந்த இடைத்தேர்தலில் பெரிய சவால் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. திமுக கூட்டணி மிக ஈஸியாக வெல்லும். முதல்வரையும் நேரில் சந்திக்க நான் நேரம் கேட்டுள்ளேன். முதலில் முதல்வரையும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரையும் நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். அதன் பிறகு கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆலோசிக்க உள்ளேன்.

மக்கள் ராஜன்
அதன் பிறகு நேரடியாக ஈரோடு கிழக்கு தொகுதிக்குச் சென்று பிரசாரத்தைத் தொடங்க உள்ளேன். காங்கிரஸ் சார்பில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் சீட் கேட்டதில் எந்தவொரு தவறும் இல்லை. போட்டியிட வாய்ப்பு கேட்க அவருக்கு முழு உரிமையும் உள்ளது. இருப்பினும், அழுததைத் தவிர்த்திருக்கலாம் என்றே நான் கருதுகிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications