‛சிலை தான் குறி’.. சென்னை கோவில் மீதான பெட்ரோல் குண்டு வீச்சின் பரபர பின்னணி.. போலீஸ் விளக்கம்
சென்னை: சென்னை கொத்தவால்சாவடியில் உள்ள கோவிலில் இன்று பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முரளி கிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது பின்னணி குறித்து சென்னை போலீசார் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளனர்.
சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் மாளிகை உள்ளது. இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு கருக்கா வினோத் என்ற ரவுடி ஆளுநர் மாளிகை நோக்கி பெட்ரோல் குண்டு வீசினார். இது ஆளுநர் மாளிகையின் வாசல் முன்பு விழுந்தது.

நீட் தேர்வை ரத்து உள்ளிட்ட விஷயங்களில் ஆளுநர் ஆர்என் ரவி கையெழுத்திட மறுப்பதால் அவர் பெட்ரோல் குண்டு வீசியதாக தகவல்கள் வெளியாகின. தற்போது கருக்காக வினோத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அடுத்த அதிர்ச்சியாக இன்று சென்னையில் உள்ள கோவிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதாவது சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் உள்ள வீரபத்திர சாமி கோவிலுக்கு சென்ற முரளி கிருஷ்ணன் என்பவர் கோவிலில் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி பெட்ரோல் குண்டாக வீசினார். பெட்ரோல் குண்டு வெடித்ததால் கோவில் பூசாரி உள்பட அங்கிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.
இதைடுத்து போலீசார் விரைந்து சென்று முரளி கிருஷ்ணாவை கைது செய்தனர். அவரிடம் விசாரிக்கப்பட்டது. அப்போது அவர் 4 ஆண்டுகளாக இந்த சாமியை வழிப்பட்டு வரும் நிலையில் அவர் தனக்கு உதவி செய்யவில்லை என்ற விரக்தியில் மதுபோதையில் பெட்ரோல் குண்டு வீசியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தான் சென்னை கொத்தவால்சாவடி கோவிலில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது? என்பது பற்றி காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை பிராட்வே, ஏழுகிணறு பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசி மற்றும் முன்குற்ற வழக்குகளை கொண்ட முரளி கிருஷ்ணன் (வயது 39). இவரது தந்தை பெயர் ஜானகி ராமன்.
இந்நிலையில் தான் முரளி கிருஷ்ணன் கொத்தவால்சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆதியப்பா தெரு-கோவிந்தப்பா தெரு சந்திப்பில் உள்ள ஸ்ரீ வீரபத்திரசாமி கோவிலுக்கு நீண்டகாலமாக வந்து செல்பவர். இன்று காலை 8.45 மணியளவில் முரளி கிருஷ்ணன் அதிகமான குடிபோதையில் பெட்ரோல் நிரப்பிய பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கோவிலுக்குள் சென்று கடவுள் சிலையை நோக்கி வீசியுள்ளார்.
உடனே அவர் பிடிக்கப்பட்டு விசாரணைக்காக கொத்தவால்சாவடி காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முரளிகிருஷ்ணன் அதிகமான மதுபோதையின் காரணமாக தெளிவற்ற மனநிலையில் இருந்ததால் இச்செயலில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.
இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் வெடிமருந்து பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications