தாராபுரத்தில் மோடி சுட்டிக் காட்டிய 1989-ம் ஆண்டு மார்ச் 25.. தமிழக சட்டசபையில் என்னதான் நடந்தது?
சென்னை: தமிழக சட்டசபை வரலாறு காணாத வன்முறையை எதிர்கொண்ட நாள் 1989-ம் ஆண்டு மார்ச் 25-ந் தேதி. அன்றைய தினம் சட்டசபையில் ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டதாக இன்று தாராபுரத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அன்று 1989-ம் ஆண்டு மார்ச் 25-ந் தேதி சட்டசபையில் நடந்த நிகழ்வு:

காலை 11 மணிக்கு சட்டசபை கூடியது. சபாநாயகர் தமிழ்க்குடிமகன் திருக்குறளை வாசித்து சபையை தொடங்கி வைத்தார்.
சட்டசபையில் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவராக இருந்த குமரி அனந்தன் எழுந்து, ஜெயலலிதா கடிதம் விவகாரத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் துரை சபையின் உரிமையை மீறும் வகையில் நடந்து கொண்டார். முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலில் இது நடந்துள்ளது. ஆகையால் கருணாநிதி மீது உரிமை மீறல் பிரச்சனையை கொண்டு வருகிறோம் என்றார். (அது என்ன ஜெயலலிதா கடித விவகாரம்: 1989-ல் திமுக ஆட்சி அமைந்த காலகட்டத்தில் அரசியலுக்கு முழுக்கு போடும் வகையில் ஜெயலலிதா எழுதிய ராஜினாமா கடிதம் ஒன்று பரபரப்பாக பேசப்பட்டது. 1989-ம் ஆண்டு மார்ச் 18-ந் தேதி சிவப்பு நிற மாருதி காரில் மர்ம நபர் ஒருவர் பத்திரிகைகளுக்கு ஜெயலலிதாவின் அரசியலுக்கு முழுக்கு கடிதத்தை விநியோகித்தபடியே வலம் வந்தார். ஆனால் இந்த கடிதத்தை பிரசுரிக்க விடாமல் சசிகலாவின் கணவர் மறைந்த ம. நடராஜன் அத்தனை கடிதங்களையும் கைப்பற்றி ஜெயலலிதாவின் ராஜினாமாவை தடுத்திருந்தார். இதனால் திமுக அரசு நடராஜன் மீது கோபப்பட்டு அவரை கைது செய்தது. இதனையடுத்து தீவிர அரசியலுக்கு திரும்பிய ஜெயலலிதா சென்னையில் கண்டனப் பேரணி நடத்தியிருந்தார்)
அப்போது ஜெயலலிதா எழுந்து, எனது டெலிபோன் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது; முதல்வரும் அவரது அமைச்சரவையும் பதவி விலக வேண்டும். அதற்கான ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருகிறேன் (டெலிபோன் ஒட்டுகேட்பு: 1989-ல் மருங்காபுரி, மதுரை கிழக்கு சட்டசபை தொகுதிகளில் அதிமுக வென்றது. மதுரை கிழக்கு தொகுதி பொறுப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். (இன்று திமுகவில் இருக்கிறார்), ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்துக்கு போனடித்தார். அப்போது போனை எடுத்து பேசியவர் நடராஜன். உங்க பார்முலாவால் ஜெயித்துவிட்டோம் என்றார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இந்த டெலிபோன் உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டது என்பதுதான் ஜெயலலிதாவின் புகார்).

ஆனால் சபாநாயகர் தமிழ்க்குடிமகன், உரிமை மீறல் பிரச்சனை குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கலாம். இப்போது முதல்வர் பட்ஜெட் உரையை வாசிக்கலாம் என்றார். இதனையடுத்து கருணாநிதி பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். ஆனால் ஜெயலலிதாவோ, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பினார்.
சட்டென மைக்கை மூடிய கருணாநிதி ஏதோ ஒன்று சொன்னார். அதை கேட்டு ஜெயலலிதா அதிர்ச்சியில் உறைந்தார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆவேசப்பட்டனர். கருணாநிதி கையில் இருந்த பட்ஜெட் பேப்பர்கள் கிழிக்கப்பட்டன. கருணாநிதியின் கண்ணாடி உடைந்தது. செருப்புகள் பறந்தன. திமுகவின் வீரபாண்டி ஆறுமுகம் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது சட்டசபையில் இருந்து தலைவிரி கோலமாக கிழிந்த சேலையுடன் வெளியே வந்த ஜெயலலிதா, துரைமுருகன் எனது சேலையை பிடித்து இழுத்து கிழித்தார். கருணாநிதி ஆபாசமாக திட்டினார். ஒரு பெண்ணை சட்டசபையில் அவமானப்படுத்தினார்கள் என கொந்தளித்தார். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக 2003-ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா இருந்த போது ஒரு விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில், இதே சட்டசபையில் துரைமுருகன் என் சேலையை பிடித்து இழுத்தார். என் சேலை கிழிந்துவிட்டது. அப்போது நான் அவமானப்படுத்தப்பட்டேன் என்றார். ஆனால் சட்டசபையில் இருந்த துரைமுருகனோ, உங்களை நான் தாக்கவே இல்லை. நீங்கள் சட்டசபையில் இருந்த இடத்தில் இருந்து தொலைவில்தான் இருந்தேன் என விளக்கம் தந்தார்.
அத்துடன், கிரிமினல் முதல்வர்; குத்துங்கடா என நீங்கதான் (ஜெயலலிதா) சொன்னீங்க.. அதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் கருணாநிதியை தாக்கினர் எனவும் துரைமுருகன் விவரித்தார். ஆனால் தாம் அப்படி சொல்லவே இல்லை என்றார் ஜெயலலிதா.
இதற்கு சட்டசபையில் இருந்த மறைந்த பேராசிரியர் அன்பழகன், கருணாநிதி பட்ஜெட் வாசித்த போது யூ கிரிமினல் டோன்ட் ரீட்... என்கிற குரல் வந்தது. அதன் பின்னரே அசம்பாவிதம் நடந்தது என்றார்.












Click it and Unblock the Notifications