துர்காம்மா காசி போறாங்க.. நம்ம சௌமியாம்மா திருப்பதிக்கு போறாங்க... தமிழக அரசியலில் நடப்பது என்ன?
சென்னை: தமிழகத்தை ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் சார்பில் துர்கா ஸ்டாலின் காசிக்கும் பாமக சார்பில் அன்புமணியும் அவரது மனைவி சௌமியாவும் ஆன்மிக தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளனர். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது தமிழக அரசியலில் நடப்பது என்ன என்று தெரிந்து கொள்ள தோன்றுகிறது.
தமிழக அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதாவின் வெற்றிடத்தை பிடித்துக் கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டி போட்டு கொள்கின்றனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகத்தை சேர்ந்த ஒரு கட்சியே பிரதமரை தேர்வு செய்யும் அதிகாரம் படைத்ததாக மாறவும் அவை துடித்து வருகின்றன.
இதற்காக கூட்டணி பேரங்களும் நடக்காமல் இல்லை. 2019-ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் இதுபோன்ற பரபரப்புகள் நடந்து வருகின்றன. ஏனெனில் லோக்சபா தேர்தல் மே மாதம் நடைபெறவுள்ளது.
சூளுரை
இந்த தேர்தலில் எப்படியும் மோடி அரசை வீழ்த்த வேண்டும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கங்கணம் கட்டி கொண்டுள்ளன. அது போல் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என்றும் தாமரையை தமிழகத்தில் எப்படியாயினு்ம மலரச் செய்வோம் என்றும் பாஜகவினர் சூளுரைத்துள்ளனர்.
ஜோசியர்
இது ஒரு புறம் இருக்க துர்கா ஸ்டாலின் காசிக்கு தனது தாய் வீட்டாருடன் சென்றுள்ளார். அங்கு காசி விஸ்வநாதரை தரிசனம் செய்தார். காசிக்கு செல்வது என்பது துர்காவின் நீண்ட நாள் ஆசையாக இருக்கிறது என்கிற போதிலும் அவரை காசிக்கு செல்லுமாறு ஜோசியர் கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
|
திருப்பம்
அது போல் மாற்றம் முன்னேற்றம் என முழங்கி வந்த பாமகவின் அன்புமணி ராமதாஸ், தனது மனைவி சவுமியாவுடன் திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதியை தரிசனம் செய்தார். திருப்பதிக்கு சென்றாலே திருப்பம் ஏற்படும் என்று சொல்வார்.
யாருக்கு வழி பிறக்கும்
இத்துடன் இன்னும் 14 நாட்களில் தை மாதமும் பிறக்கிறது. எனவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கேற்ப இவர்களுக்கும் வழி பிறக்கும் என்ற எதிர்பார்ப்பு நிரம்பியுள்ளது. தமிழக அரசியல்வாதிகளும் தங்கள் கஷ்டங்களை தெய்வத்திடம் தெரிவிப்பதாகவே கருதப்படுகிறது. யாருடைய வேண்டுதல் பலிக்கும் என்பதை பார்ப்போம் .