வீடு தேடி வந்த பெண்? பிரேம்ஜி கொடுத்த ஷாக்! கங்கை அமரன் ஓபன் டாக்!
சென்னை: பிரேம்ஜிக்கு ஏன் திடீரென்று கல்யாணம் முடிவு செய்யப்பட்டது, அது காதல் திருமணமா? அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்பது பற்றி இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் கங்கை அமரன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரேம்ஜிக்கு எப்போ கல்யாணம் என்பது விடை தெரியாத கன்னித் தீவு கதைபோல பல ஆண்டுகளாக நீண்டு கொண்டே இருந்தது. அந்த சஸ்பென்ஸை சட்டென்று போட்டு உடைத்ததைப் போல திடீரென்று பிரம்ஜிக்கு கல்யாணம் நடந்துவிட்டது. அதிலும் ஊடகத்தினர் யாரும் வரக்கூடாது என்று கட்டுப்பாடு வேறு.

ஒரு காலத்தில் ரஜினிதான் தனது கல்யாணத்திற்கு யாரும் வரவேண்டாம் என்று அறிக்கைவிட்டார். அதற்குப் பிறகு பிரேம்ஜி அப்படி ஒரு அறிக்கையைவிட்டார். அந்தளவுக்கு அவருக்கு ரசிகைகள் அதிகம். அவ்வளவு பேரும் திரண்டு வந்தால் கல்யாணம் நிகழ்ச்சி திக்குமுக்காடிவிடும் என்று பயந்து போய்தான் அப்படி ஒரு அறிவிப்பை பிரேம்ஜி குடும்பத்தினர் கொடுத்தார்கள்.
ஆனாலும், மீடியா உலகில் பிரேம்ஜியை திருமணம் செய்து கொண்டவர் யார்? அது காதல் திருமணமா? அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா? எனப் பல சந்தேகங்கள் ஓடிக்கொண்டுதான் உள்ளன. அதற்கு எல்லாம் நேரடியாகப் பதிலளிக்க பிரேம்ஜிக்கு நேரம் இல்லை. ஆகவே அவரது அப்பா கங்கை அமரன் ஒரு யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் பிரேம் கல்யாணம் பற்றி பல் விசயங்களைப் பேசியுள்ளார்.
இது பற்றி கங்கை அமரன், "நடிப்பதற்காக ஷூட்டிங் போனான் என்றால், உடனே கூட நடித்த ஹிரோயினுடன் சேர்ந்து நிற்பதைப்போல போட்டோவை இன்ஸ்டாகிராமில் 'விரைவில் எதிர்பாருங்க:' எனப் போட்டுவிடுவான் பிரேம்ஜி. எல்லோரும் உடனே அவனுக்குக் கல்யாணமா? எனப் பேச ஆரம்பித்துவிடுவார்கள். நான் கூட ஏண்டா அப்படி போட்டோ போட்ட என்று கேட்பேன். கூட நடிக்கும் பெண் என்று பதில் சொல்வான். ஏதோ படத்தின் புரமோஷனுக்காக அப்படிச் செய்து கொண்டிருந்தான். ரொம்ப நாட்கள் இதே மாதிரியே சொல்லிக் கொண்டிருந்தான். கொரோனா வந்த போது என் மனைவி இறந்துவிட்டார். 2 வருடங்களாகிவிட்டன.
ஆகவே, நானும் அவனைக் கேட்க ஆரம்பித்துவிட்டேன். அம்மா வேறு இல்லை, எனக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தேன். ஆகவே ஒரு கல்யாணம் பண்ணிக் கொள் என்றேன். உனக்கு ஒரு துணை வேண்டும் என்றும் சொன்னேன். பலமுறை இப்படிச் சொல்லிச் சொல்லிப் பார்த்துவிட்டேன். ஒருநாள் ரொம்ப கண்டிப்புடன் சொன்னேன். எனக்கும் அவன் தனியாக இருப்பது பிடிக்கவில்லை.
எனக்குப் பின்னால் அவனைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை. அந்தக் கவலை என மனதை அழுத்திக் கொண்டே இருந்தது. ஒருநாள் மிகக் கடுமையாகப் பேசினேன். அதைக் கேட்டுக் கொண்டிருந்தவன். 'சரி டாடி நான் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன்' என்றான். எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. 'என்னடா உண்மையாகத்தான் சொல்றீயா?' என்றேன். அவன் சம்மதித்தான்.
மறுநாள் காலை வீட்டுக்கு ஒரு பெண் வந்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. 'டாடி இந்தப் பெண்ணைதான் நான் கல்யாணம் பண்ணிக் கொள்ள போறேன்' என்றான். அவர்கள் இரண்டு பேருக்குள் முன்பே காதல் இருந்துள்ளது. அது எனக்குத் தெரியாது. வீடு தேடி வந்த பெண் என் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். நான் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டேன்.
பிரேம்ஜிக்கு எப்போது கல்யாணம் நடக்கும் என்று அதிகம் கவலைப்பட்டவர்கள் இரண்டு பேர். ஒன்று எஸ்.பி.பி. மற்றொன்று என் மனைவி. சின்ன வயதிலேயே பிரேமை கூப்பிட்டுக் கொண்டு நிறையக் கச்சேரிக்கும் போவோம். அப்பவே எஸ்.பி.பி. ஷைலஜாவை கல்யாணம் பண்ணிக்கோடா என்று கிண்டல் பண்ணுவார். ஷைலஜாவுக்கு கல்யாணம் ஆன பிறகுகூட, 'நீ என்ன கட்டிக்காததால்தான் நான் வேறு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்' என்று அவர் கலாட்டா பண்ணுவார்.
எஸ்.பி.பி. என் குடும்பத்தில் ஒருவரைப் போல. எங்கள் அந்தரங்கங்கள் தெரிந்த நண்பன். வீட்டு பிரச்சினைகளுக்காக நிறைய உதவிகளைச் செய்தவன். அவன் ஹாஸ்பிட்டலுக்கு போகும்போது போன் செய்து, 'ஒன்றும் பிரச்சினை இல்லை, பயப்படாதே. ஒரு டெஸ்ட் எடுக்கப் போகிறேன். மருத்துவமனைக்கு என்னைப் பார்க்க வராதே. நானே நான்கு நாளில் வந்துவிடுவேன். பிறகு வீட்டுக்கு வா' என்றான். அவன் மருத்துவமனையில் இருக்கும் போது வீடியோவில் பேசி அவனுக்கு அனுப்புவேன். அவன் அதைப் பார்த்துவிட்டுப் பேசி அனுப்புவான்.
அவனுக்குக் கடைசியாக இளையராஜாவைப் பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால், மருத்துவர்கள் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. அவன் இறந்த பிறகு 4 நான் சாப்பிடவே இல்லை. என்னால் சாப்பிடவே முடியவில்லை.
அடுத்து என் மனைவி பிரேம்ஜி கல்யாணத்தைப் பார்க்காமலே போய்விட்டாள். ஆனால், இந்தக் குறைகள் எல்லாவற்றையும் வெங்கட் பிரபு போக்கிவிட்டான். அவன்தான் முன்னால் நின்று தம்பிக்காக அனைத்து வேலைகளையும் செய்தான். ஒரு அம்மா மாதிரி அவன் தம்பியை அரவணைத்துக் கொண்டான். அதில் எனக்குப் பரம திருப்தி.
பிரேம் கலகலப்பானவன். எதற்கும் கவலைப்படமாட்டான். அவன் ஆண்களைவிடப் பெண்களிடம் அதிகம் பேசுவான். இதை நான் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை. அவன் ஒரு ஜாலியான பையன். எப்போது பல ஹீரோயின்கள் அவன் பக்கத்திலேயே இருப்பார்கள். அதற்குக் காரணம் அவன் கலகலப்பாக இருப்பான். என்னிடம் கூட ஹீரோக்களை விட ஹீரோயின் தான் அதிகம் பேசுவார்கள். நானும் ஷோபாவும் அவ்வளவு நெருக்கமான நண்பர்கள்.
அதேபோல ராதிகா, ராதா, அம்பிகா எனப் பலரும் என்னிடம் அன்பாகப் பழகுவார்கள். பிரேம் என்னை மாதிரி. அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்க்கவேண்டும் என்பது ஒரு தகப்பனாக என் மனதை அழுத்திக் கொண்டே இருந்தது. அந்தக் கவலை இனி இல்லை. அவனைக் கவனித்துக் கொள்ள என்று ஒரு ஆள் வந்தாச்சு. அதுவே எனக்குச் சந்தோஷம்" என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications