சென்னை வியாசர்பாடியில் வினையான கிரிக்கெட் விளையாட்டு.. சின்னத்தவறால் இல்லாமல் போன மாணவர்
சென்னை: சென்னை வியாசர்பாடியில் கல்லூரி நண்பர்களுடன் நேற்று முன்தினம் கிரிக்கெட் விளையாடிய போது குளத்தில் மூழ்கினார் கல்லூரி மாணவர். நண்பர் அடித்த பந்தை எடுக்க முயன்றபோது தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவர் தவறி விழுந்த நிலையில், அவரை காப்பாற்ற முடியவில்லை..
விளையாடும் போது செய்யும் சிறு தவறு சிலரது வாழ்க்கையையே அடியோடு காலி செய்துவிடும். குறிப்பாக கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் விளையாடும் போது, மிக கவனமாக இருக்க வேண்டும். பந்து பட்டு சிலர் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. சிலர் பந்தை எடுக்க செல்லும் போது அடிப்பட்டு இறக்கிறார்கள். அப்படித்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னை வியாசர்பாடி திருச்சி சின்னசாமி தெருவை சேர்ந்த லாரன்ஸ் இருதயராஜ் என்பவருடைய மகன் ஜாக் டேனியல் (வயது 19). இவர் அண்ணா நகரில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். ஜாக் டேனியல் நேற்று முன்தினம் மாலை சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள மங்களபுரம் சேமாத்தம்மன் காலனிக்கு சென்றுள்ளார். அங்கு அவரது பாட்டி வீடு இருக்கிறது. பாட்டியை பார்த்துவிட்டு , அங்கு வசிக்கும் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்
அப்போது அவரது நண்பர் அடித்த பந்து அங்கிருந்த குளத்தில் விழுந்தது. பந்தை எடுக்க குளக்கரையை நோக்கி ஜாக் டேனியல் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த சோகம் நடந்தது. திடீரென ஜாக் டேனியல் நிலைதடுமாறி குளத்தில் விழுந்து நீரில் மூழ்கினார். அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் ஜாக் டேனியலை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் ஜாக் டேனியல் குளத்தில் மூழ்கிய நிலையில், பலியானார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சென்னை புளியந்தோப்பு உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு குளத்தில் மூழ்கி பலியான ஜாக் டேனியல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி சென்னை ஓட்டேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications