கோவையில் இருந்து சென்னைக்கு பயிற்சிக்கு வந்த பெண் மருத்துவர்.. லேப்டாப் சார்ஜரில் இருந்த எமன்
சென்னை: கோவையில் இருந்து சென்னைக்கு பயிற்சிக்கு வந்த பெண் மருத்துவர் சரணிதா லேப்டாப்பில் சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் அயானவரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மின்சாதனங்களை கையாளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். ஏனெனில் திடீரென மின்சாரம் தாக்கி விபரீதம் நடக்கும் வாய்ப்புகள் அதிகமாகும். செல்போனில் சார்ஜ் போட்டபடி பேசக்கூடாது என்று சொல்ல முக்கிய காரணம், திடீரென மின்சாரம் தாக்கும் வாய்ப்பு இருப்ப தான்.

தினமும் இரவில் செல்போனை நீண்ட நேரம் பயன்படுத்தும் பலர், செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு அப்படியே படுத்து தூங்குவார்கள். திடீரென இரவு நேரத்தில் ஏதாவது கால் வந்தாலோ அல்லது காலையில் கால் வந்தாலோ, செல்போனில் உள்ள வயரை பிடுங்காமல் அப்படியே செல்போனில் சார்ஜ் ஏறியபடியே பேசுவார்கள்.
அப்படி பேசும் போது, செல்போன் சார்ஜர் வயரில் மின்கசிவு ஏதாவது இருந்தால். அவர் மீது மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே இறந்து போவார். இப்படி சமீப ஆண்டுகளில் பலர் இறந்து போயிருக்கிறார்கள். அதனால் தான் செல்போனில் சார்ஜ் போட்டபடி பேச வேண்டாம் என்றும், செல்போனை நீண்ட நேரம் சார்ஜ் போட வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.
செல்போனை போல் லேப்டாப்பும் சிக்கலானது. லேப்டாப்பில் சார்ஜ் போடும் ஸ்விட்சை ஆப் செய்துவிட்டு வயரை பிடுங்க வேண்டும். சில நேரங்களில் வயர்களில் மின் கசிவு ஏற்பட்டால் அது ஆளையே காலி செய்துவிடும்.. அப்படித்தான் கோவையைச் சேர்ந்த டாக்டருக்கு சென்னையில் நடந்துள்ளது.
கோவையைச் சேர்ந்த பெண் மருத்துவர் சரணிதாவுக்கு 32 வயது ஆகிறது. இவர் அண்மையில் கோவையில் இருந்து சென்னைக்கு பயிற்சிக்காக வந்துள்ளார். சென்னை அயனாவரம் பகுதியில் தங்கியிருந்த சரணிதா, தனது லேப்டாப்பிற்கு சார்ஜ் போட்டு பயன்படுத்த விரும்பியுள்ளார்.
ஏனெனில் அவரது லேப்டாப்பில் சார்ஜ் இல்லாமல் இருந்திருக்கிறது. தனது பணிக்காக லேப்டாபிற்கு சார்ஜ் போட முயன்ற டாக்டர் சரணிதா, அதற்காக வயரை எடுத்து பிளக் பாய்ண்டில் சொருகி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக டாக்டர் சரணிதா மீது வயரில் இருந்த மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கியது. இதனால் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே சார்ஜர் வயரை கையில் பிடித்தபடியே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அயனாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது டாக்டர் சரணிதா சார்ஜர் வயரை கையில் பிடித்த படி இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொதுவாக வீடுகளில் மின்கசிவு காரணமாக மின் விபத்து ஏற்படுவதையும், அதனால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்கவும் வீட்டில் ஆர்சிசிபி எனப்படும் (Residual Current Circuit Breaker) மின் பாதுகாப்பு ஸ்விட்சை அமைக்க வேண்டும்.
ஆர்சிசிபி என்றால் என்ன: இந்த ஆர்சிசிபி ஸ்விட்களை அமைத்தால் உங்கள் வீட்டு மின் வயர்களில் மின்கசிவு ஏற்படும் போது, எர்த் லீக் ஆகும். அதை கண்டுபிடித்து மின்சாரத்தை உடனே துண்டித்துவிடும். அதாவது rccb ஸ்விட்ச் அமைத்திருந்தால், வயர்களில் தவறுதலாக மின்கசிவு ஏற்பட்டாலோ அல்லது தவறான வயரிங் காரணமாக மின்சாரம் ஒருவரை தாக்கும் நிலை ஏற்பட்டால் உடனே மின்சாரத்தை துண்டித்துவிடும். ஆர்சிசிபி ஸ்விட்ச் பொறுத்தினால் மின்சாரம் தாக்கி யாரும் உயிரிழக்க மாட்டார்கள். உயிரிழப்பை தடுக்க இந்த ஸ்விட்ச் மிக முக்கியமாகும்.
2 போல் ஆர்சிசிபி மற்றும் 4 போல் ஆர்சிசிபி என இரண்டு வகை ஆர்சிசிபி இருக்கிறது. 2 போல் ஆர்சிசிபி சிங்கிள் பேஸ் மின்சார கணெக்சனுக்கு பயன்படுத்துவார்கள். 4 போல் ஆர்சிசிபி என்பது 3 பேஸ் மின்சார இணைப்பிற்கு பயன்படுத்துவார்கள். இந்த 4 போல் ஆர்சிசிபியில் நிறைய வகைகள் உள்ளன. வீட்டில் வயர்களில் உள்ளே வரும் மின்சாரமும் வெளியேறும் மின்சாரமும் சமமாக இருக்க வேண்டும்,. அப்படி இல்லாமல் உள்ளே வரும் மின்சாரம் வெளியே செல்லாமல் போனால் எர்த் வழியாக வெளியேறும், இதை கண்றியும் ஆர்சிசிபி ஸ்விட்ச்கள் சென்சாரில் அலார்ட் செய்து மின்சாரத்தை உடனே துண்டித்துவிடும். இதன் மூலம் வயரை யாராவது தொட்டால் மின்சாரம் தாக்கி இறக்க மாட்டார்கள்.












Click it and Unblock the Notifications