கன்னியாகுமரி மீனவர் விசைப்படகில் இருந்த கோலம்.. உறவினர்களுக்கு பார்த்ததுமே எழுந்த சந்தேகம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் பூத்துறை கிராமத்தை சேர்ந்தவர் கதீர் என்ற மீனவர் கடந்த 13 நாட்களுக்கு முன்பு கேரளம் மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து இரவிபுத்தந்துறையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றார். அவருக்கு நடந்ததை கேள்விப்பட்டு உறவினர்கள் ஆடிப்போனார்கள்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் பூத்துறை கிராமத்தை சேர்ந்த 45 வயதாகும் கதீர், மீனவர் ஆவர். இவர் கடந்த 13 நாட்களுக்கு முன்பு கேரளம் மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து இரவிபுத்தந்துறையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அந்த விசைப்படகில் மொத்தம் 10 பேர் இருந்துள்ளார்கள்.

இவர்கள் கடந்த 22-ந் தேதி இரவு கரையில் இருந்து 80 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தார்கள். அப்போது விசைப்படகில் வைத்து கதீர் திடீரென மாரடைப்பில் இறந்ததாக சக மீனவர்கள் செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். இதையடுத்து மீனவர்கள் கதீரின் பிணத்துடன் கரைக்கு திரும்பி உள்ளார்கள். அவர்கள் நேற்று தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் கரை சேர்ந்துள்ளார்கள்.
இதையடுத்து கதீரின் உடலை உறவினர்கள் பார்த்த போது தலை, முகம் மற்றும் இடுப்பு பகுதிகளில் பலத்த ரத்த காயங்கள் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடலை உறவினர்கள் ஆம்புலன்ஸ் ஏற்றி கொண்டு குளச்சல் கடலோர காவல்குழும போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தனர். அந்த புகாரில் கதீர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அத்துடன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக குளச்சல் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேதப் பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் மீனவரின் சாவுக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் கூறினார்கள். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் விசைப்படகில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications