சென்னையில் ஓடும் ரயிலில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்ன நடந்தது? காவல்துறை விளக்கம்
சென்னை: சென்னையில் ஓடும் ரயிலில் புலம் பெயர்ந்த தொழிலாளர் தூக்கி எறியப்பட்டதாக பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி முற்றிலும் தவறு என்றும், அந்த செய்தி நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னை மாநகர காவல்துறை இன்றுவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "19.02.2024 அன்று பிரபல செய்தி நிறுவனத்தின் பீகார் ட்விட்டர் (X) ஹேண்டில் ஹிந்தியில் ட்வீட் செய்து, 48 நொடிகள் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளது, இந்த வீடியோவில், சென்னையில் ஓடும் ரயிலில் இருந்து இரண்டு புலம் பெயர்ந்த தொழிலாளர்களை குற்றவாளிகளால் தூக்கி வெளியே எறியப்பட்டதாகவும், இதன் விளைவாக ஒருவர் உயிரிழந்தார் என்றும், மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் மேற்கூறிய செய்தியை அவர்களது முகநூல் பக்கத்திலும் மற்றும் யூடியூப் சேனலிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மேற்படி வீடியோவில் இறந்த நபரின் உடல் அடங்கிய சவப்பெட்டி அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய செய்தி முற்றிலும் தவறானது ஆகும், இது போன்ற காணொளிகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டும் என்றோ, ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடன் பரப்பபட்டுள்ளது என்பதனையும், இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் சென்னை பெருநகர காவல் எல்லையில் நடக்கவில்லை என்பதனை சென்னை பெருநகர காவல் துறை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறது.
மேற்குறிப்பிட்ட வீடியோ விவகாரம் தொடர்பான விசாரணையில், கடந்த 06-02-2024 அன்று பீகார் மாநிலம், கிழக்கு சாம்ப்ரான் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் மஹ்தோ கிராம் துர்காலியா என்பவர் விழுப்புரத்திலிருந்து தாம்பரத்திற்குச் செல்லும் ரயில் எண்.60208இல், பிளாட்ஃபார்ம் எண். 2 இல் இருந்து ரயிலின் மேலே ஏறிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து குறித்து விழுப்புரம் அரசு இரயில்வே காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, விழுப்புரம் மாவட்ட காவல் துறை அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து, பீகார் மாநிலம் பாட்னா வரை தடையில்லா சான்று வழங்கியுள்ளது.
அஸ்வினி குமார் உபாத்யாய் Vs யூனியன் பேங்க் ஆப் இந்தியா வழக்கில் (W.P. (Civil) எண். 943 இன் 2021), மாண்புமிகு உச்சநீதிமன்றம் பிறப்பித்த 13.1.2023 தேதியிட்ட உத்தரவில், "வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மீது தானாக முன் வந்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும், எனவே, ச/பி 153, 153A (1)(a), 505 (1) (b) & 505 (2) இதசவின் கீழ் மேற்கூறிய தவறான செய்திகளுக்கு எதிராக சென்னை பெருநகர காவல் துறை, மத்திய குற்றப்பிரிவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற தீங்கிழைக்கும் அவதூறு தகவல்கள் / காணொளி / சமூக வலைதளங்களில் வெளியிடுவதை அனைவரும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" இவ்வாறு சென்னை மாநகர காவல்துறை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications