'சூனா பானா' வடிவேலு பாணியில் நண்பரின் மதுவை பிடுங்கி குடித்த இளைஞர்.. கடைசியில் சோகம்
சென்னை: வடிவேலுவின் 'சூனா பானா' காமெடி போல் மயிலாடுதுறையில் மதுபானத்தில் பூச்சி மருந்தை கலந்த நண்பனிடம் இருந்து மதுபானத்தை பிடுங்கி, சொல்ல சொல்ல கேட்காமல் குடித்த இளைஞருக்கு கடைசியில் என்னாச்சு தெரியுமா? இதனை பாருங்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே பில்லாவிடந்தை கிராமத்தைச் சேர்ந்த 32 வயதாகும் ஜோதிபாசுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார். ஜோதிபாசுவின் மனைவி சகிலா கோயம்புத்தூரில் உள்ள தனியார் ஃபேக்டரி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

மனைவி தன்னை பிரிந்து சென்றுவிட்டதால் கடந்த சில மாதங்களாக மனஉளைச்சலில் இருந்து வந்த ஜோதிபாசு, செவ்வாய்கிழமை மதியம் காரைக்கால் மாவட்ட எல்லையில் உள்ள நல்லாத்தூரில் உள்ள மதுபான கடையில் மதுபானம் வாங்கி உள்ளார். ஒரு பாட்டிலை குடித்துவிட்டு, இன்னொரு பாட்டில் வாங்கி அதில் உயிரை மாய்த்துக் கொள்வதற்காக பூச்சி மருந்து கலந்து கொண்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
வீட்டின் அருகே தென்னம்பிள்ளை சாலை பகுதியில் பூச்சி மருந்து கலந்த மது குடித்துவிட்டு, பூச்சி மருந்து கலந்த பாதி மதுபானத்தை அங்கேயே வைத்திருக்கிறார். அப்போது அப்பகுதிக்கு வந்த அவரது நண்பரான ஜெரால்டு(24) என்பவர் பூச்சி மருந்து கலந்து இருப்பதை அறியாமல் ஜோதிபாசு வைத்திருந்த மதுபானத்தை வாங்கி குடிக்க முற்பட்டிருக்கிறார்.
அப்போது, மதுவில் விஷம் கலந்திருப்பதாக ஜோதிபாசு எச்சரித்துள்ளார். ஆனால் ஏற்கனவே முழு மது போதையில் இருந்த ஜெரால்டு, ஜோதிபாசுவின் பேச்சைக் கேட்காமல் பூச்சி மருந்து கலந்த மதுவை சட்டென எடுத்து குடித்துவிட்டாராம். சாகும் மனநிலையில் இருந்தஜோதிபாசு,நண்பர் ஜெரால்டுவுடன் மதுபோதையில் உளறிய படி நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் ஜோதிபாசு மருந்து கலந்து குடித்த மதுபானத்தை வாந்தி எடுத்துவிட்டார்.
ஆனால் ஜெரால்டுக்கு வாந்தி வரவில்லை.. இதனிடையே போதை ஓரளவு தெளிந்தபின்னர், ஜெரால்டு வீட்டிற்கு ஜோதிபாசு தகவல் கொடுத்துள்ளார்கள். அங்கு வந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இருவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். ஆனால் மருத்துவமனையில் அனுமதித்த சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி ஜெரால்டு உயிரிழந்துள்ளார்.
ஜோதிபாசுவிற்கு தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறார். இது தொடர்பாக மயிலாடுதுறை பெரம்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படடது. இதை ஏற்று போலீசார் விரைந்து வந்து ஜெரால்டின் உடலை உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடிவேலு நடித்த 'சூனா பானா' காமெடி காட்சியைப் போல விஷம் கலந்த மதுபானம் என தெரியாமல் அதனை எடுத்துக் குடித்த நபர் இறந்து போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும் ஜோதிபாசு, ஜெரால்டுவை கொலை செய்யும் நோக்கில் மதுவில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்தாரா? அல்லது இது எதிர்பாரா விதமாக நடந்ததுதானா? என்பது விசாரணையில் முடிவில் தான் தெரியும் என்கிறார்கள் போலீஸ்காரர்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications