செந்தில்பாலாஜிக்கு அட்வைஸ் இருக்கட்டும்.. ஜெயக்குமார் வீட்டுக்கு போலீஸ் வந்த போது என்ன நடந்தது?
சென்னை: செந்தில்பாலாஜி எதற்கு அழுதார் என்றும் ஆம்பள அழக்கூடாது எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ் செய்த நிலையில், ஓராண்டுக்கு முன்னர் ஜெயக்குமாரை கைது செய்ய போலீஸ் வந்த போது அவர் என்ன செய்தார் என்பதை சுட்டிக்காட்டி திமுகவினர் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது திமுக நிர்வாகிகளை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்ய போலீஸார் அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர்களிடம் ஜெயக்குமார் வாக்குவாதம் செய்ததோடு, நான் ஒன்றும் ஓடிவிட மாட்டேன் என்றெல்லாம் கூறி போலீஸாருடன் செல்ல மறுத்தார்.

மாவட்டச் செயலாளர் வரட்டும் அதன் பிறகு உங்களோடு வருகிறேன் என போலீஸாரின் பொறுமையை சோதித்த ஜெயக்குமார், அவர்கள் எவ்வளவோ கூறியும் அசைந்து கொடுக்கவில்லை. ஜெயக்குமாரை கைது செய்யக்கூடாது என அவரது மனைவியும் போலீஸாருடன் வாக்குவாதம் செய்தார்.
வாங்க சார் பார்த்துக்கலாம் என போலீஸார் கெடுபிடி காட்டிய பிறகே போலீஸ் வாகனத்தில் ஏறினார் ஜெயக்குமார். இந்த நிகழ்வுகளை எல்லாம் ரீவைண்ட் செய்து சுட்டிக்காட்டும் திமுகவினர் செந்தில்பாலாஜிக்கு அட்வைஸ் செய்வது இருக்கட்டும் உங்க கதை என்னன்னு எங்களுக்கு தெரியாதா என பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
தன் மீது தவறில்லை என்றால் செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டியதுதானே எனவும் அதற்கு எதற்கு அழுது புரண்டு ஆர்ப்பாட்டம் பண்ண வேண்டும் என ஜெயக்குமார் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு பிறகு நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த போது, திருச்சியில் தங்கி தினமும் கறி, கோழி, மீன் என நிர்வாகிகள் வீட்டில் விருந்து சாப்பிட்ட நிகழ்வையும் மறந்திருக்க முடியாது.












Click it and Unblock the Notifications