சென்னை நந்தனம் புதிய அடுக்குமாடி குடியிருப்பில்.. ஆசையுடன் வந்தவர்களுக்கு.. முதல் நாளே ட்விஸ்ட்
சென்னை: சென்னை நந்தனத்தில் அரசின் சார்பில் புதிதாக திறக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயணித்த குடியிருப்புவாசிகள் ஆசையுடன் லிப்டில் ஏறிய நிலையில், திடீரென ஐந்தாவது மாடியில் லிப்ட் பழுதாகி சிக்கி கொண்டனர். சுமார் 20 நிமிட போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தமிழகத்தில் வாழும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு, அனைத்து வசதிகளுடன் வீடுகள் கட்டுவதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 1970-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தை தொடங்கினார். இந்நிலையில் நகர்ப்புற வசதிகளுடன் வீட்டு வசதி ஏற்படுத்துவது அவசியம் என்று கருதி, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சென்னை உள்பட பல்வேறு நகர்புறங்கல் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏழை எளிய மக்கள் வசிக்கிறார்கள்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வள்ளீஸ்வரன் கோவில் தோட்டம், ஜோகித் தோட்டம் ஆகிய திட்டப்பகுதிகளில் ரூ.146 கோடியே 19 லட்சம் மதிப்பில் ஆயிரத்து 46 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டிருக்கிறது.
இந்த திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமையான நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பங்கேற்று, புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
புதிதாக திறக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், ஒரு ஹால், படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகள் இருக்கின்றன. கடந்த இரண்டரை ஆண்டுகளில் திமுக அரசு 72 திட்டப்பகுதிகளில், ரூ.2 ஆயிரத்து 544 கோடியே 19 லட்சம் மதிப்பில், 23 ஆயிரத்து 259 அடுக்குமாடி குடியிருப்புகள் குடிசை பகுதிகளில் வாழும் மக்களுக்காக கட்டியிருக்கிறது.
இதனிடையே சென்னை நந்தனம், ஜோகித் தோட்டம் பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.58 கோடியே 66 லட்சம் மதிப்பில் 13 தளங்கள் கொண்டு 416 வீடுகளுடன் கட்டப்பட்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு அமைச்சர் தா.மோ.அன்பரசனால் நேற்று திறந்து வைத்தார்.
புதிய அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் வீட்டு சாவிகளை பெற்று கொண்டு, பல்வேறு மாடிகளில் உள்ள தங்கள் வீட்டை பார்வையிடுவதற்காக 'லிப்ட்' மூலம் குடியிருப்புவாசிகள் ஆசையுடன் பயணித்தனர். அதில், ஒரு கைகுழந்தை மற்றும் பெண்கள் உள்பட 8 பேர் ஒரு லிப்டில்' பயணித்த போது, 5-வது தளத்தில் திடீரென 'லிப்ட்' பழுதாகி நின்றுவிட்டதாம் இதனால், 'லிப்டில்' இருந்த குடியிருப்பு வாசிகள் பயந்து போய் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்..
பின்னர் 'லிப்டில்' மாட்டி கொண்டவர்கள் செல்போன் மூலம் தகவல் கொடுத்த நிலையில், நிர்வாகத்தினரிடம் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்த 'லிப்ட்' ஆபரேட்டர்கள் மூலம் 'லிப்ட்'டில் சிக்கி கொண்டவர்கள் சுமார் 20 நிமிடம் போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார்கள். ஜெனரேட்டர் மூலம் இயக்கப்பட்ட 'லிப்ட்', திடீரென ஜெனரேட்டர் நின்றுவிட்டதால் நடுவழியில் லிப்ட் நின்றதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications