"சின்ன கல்லு பெரிய லாபம்" வாழ்க்கையை மாற்றும் மேஜிக்! Coffee Can Investing தெரியுமா-ஆனந்த் சீனிவாசன்
சென்னை: சின்ன சேமிப்பின் மூலம் பணக்காரராக வேண்டும் என பொதுவாகவே பலரும் நினைப்பார்கள். அப்படி சின்ன முதலீட்டில் அதிகப் பணத்தைப் பெற உதவும் காபி கேன் இன்வெஸ்டிங் என்றால் என்ன என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கியிருந்தார். அது குறித்துப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இப்போது இருக்கும் முக்கிய பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் ஆனந்த் சீனிவாசன். இவர் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எப்படிச் சேமிக்க வேண்டும் என்பது குறித்துத் தொடர்ந்து பேசி வருகிறார்.
சேமிப்பு, முதலீடு என்றால் என்னவென்றே தெரியாதவர்களும் கூட இது தொடர்பாக எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எளிமையாக இவற்றை ஆனந்த் சீனிவாசன் விளக்கி வருகிறார்.

ஆனந்த் சீனிவாசன்: இதற்கிடையே ஆனந்த் சீனிவாசன் காபி கேன் இன்வெஸ்டிங் (coffee can investing) குறித்து சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசியிருந்தார். இது ஏன் முக்கியமானது என்பது குறித்தும் விளக்கியிருந்தார். அதென்ன காபி கேன் இன்வெஸ்டிங். இதன் மூலம் அதிகபட்ச பணத்தைச் சேமிக்க முடியுமா. மற்ற முதலீடுகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்பது எல்லாம் குறித்துப் பார்க்கலாம்.
காபி தூள்கள் பொதுவாக கேன்களில் தான் இருக்கும் இது அனைவருக்கும் தெரியும். இந்த கேன்களை வாங்கியே பொதுமக்கள் காபி தூளைப் பயன்படுத்துவார்கள். இந்த கேனில் இருக்கும் காபித்தூள் காலியான உடன் அதைப் பல காரணங்களுக்கா பயன்படுத்துவார்கள். அதுபோல அதை ஷேர் வாங்கி சேமிக்க பயன்படுத்துவதே காபி கேன் இன்வெஸ்டிங் ஆகும்.
அதென்ன காபி கேன் இன்வெஸ்டிங்: அதாவது இந்த காலத்தில் பங்குகள் எல்லாம் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை ஆகிறது. ஆனால் அந்த காலத்தில் பங்குகள் எல்லாம் பேப்பரில் தான் வர்த்தகம் ஆகும். எதாவது ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி, அதன் பேப்பரை காபி கேனில் வைத்துவிடுவார்கள். அதை அப்படியே மறந்துவிடுவார்கள்.
சில பல ஆண்டுகள் கழித்து அதை எடுத்துப் பார்த்தால் அதன் மதிப்பு பல மடங்கு அதிகரித்து இருக்கும். அப்படி காபி கேனை வைத்து முதலீடு செய்வதாலேயே இதைக் காபி கேன் இன்வெஸ்டிங் எனச் சொல்கிறார்கள். ஆண்டுக் கணக்கில் நாம் இந்த பங்குகளை டிராக் செய்ய மாட்டோம் என்பதால், ரிஸ்கே இல்லாமல் இருக்கும் மிகச் சிறந்த பங்குகளை இதில் நாம் வாங்குவது அவசியமாகிறது.
இப்போது பங்குகள் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. இருப்பினும், எதாவது ஒரு நல்ல நிறுவனத்தின் பங்கை அப்படியே வாங்கி போட்டுவிட்டுப் பல காலம் அதை நாம் பார்க்காமல் விட்டுவிட வேண்டும். அது நல்ல நிறுவனம் என்பதால் அதன் மதிப்பு சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்திருக்கும். இதன் மூலம் நாம் மிகச் சிறந்த லாபத்தைப் பெற முடியும். இதன் பெயர் தான் காபி கேன் இன்வெஸ்டிங் ஆகும்.
புதையலாக மாறும்: இது குறித்து ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், "அந்த காலத்தில் ஷேரை பேப்பரில் தான் இருக்கும். ஷேரை வாங்கி அதைக் காபி கேனில் வைப்பார்கள். சில பல காரணங்களால் அதை மறந்துவிட்டால், காலம் ஓடிவிடும். சுமார் 10 ஆண்டுகள் கழித்து அதைத் திறந்தால் நல்ல லாபம் கிடைக்கும். நானே இதுபோல பலரைப் பார்த்துள்ளேன். அப்பா ஷேர் வாங்கி வைத்திரு இருப்பார்.
பல ஆண்டுகள் கழித்து எதிர்பாராத விதமாக அதைப் புதையல் போலக் கண்டுபிடிப்பார்கள். நல்ல நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தால் அந்த பங்கின் மதிப்பு பல மடங்கு அதிகரித்திருக்கும். அப்படிக் கிடைக்கும் புதையல் பங்குகளை விற்று வீடு வாங்கியவரை எல்லாம் நான் பார்த்துள்ளேன்" என்றும் அவர் தெரிவித்தார். அதேநேரம் எந்தவொரு பங்கிலும் முதலீடு செய்தவது என்பது சந்தை ஆபாயங்களுக்கு உற்பட்டது. நிதி ஆலோசகரிடம் உரிய ஆலோசனை பெற்று முதலீடு செய்வதே சிறந்ததாக இருக்கும்.












Click it and Unblock the Notifications