அதிமுகவில் நடப்பது கலவரம்? 2026 இல் திமுக 200 சீட்டு வரும்..? மருது ஆதங்கம்
சென்னை: அதிமுக தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் இயங்கினார் வரும் 2026 தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதியாகிவிடும் என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மருது அழகு ராஜ் தெரிவித்திருக்கிறார்.
வரும் டிசம்பர் 15 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கள ஆய்வுக் கூட்டங்களில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த அறிவிப்பு அவசர அவசரமாக வெளியாகி இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமியால் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஓபிஎஸ் அணியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் மருது அழகு ராஜ் உண்மையில் அதிமுகவில் கள ஆய்வு நடக்கிறதா? அல்லது கலவரம் நடக்கிறதா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேலும் அவர் எக்ஸ் தள பதிவில் மகாராஷ்டிராவில் பாஜக வேலை முடிந்துவிட்டது. அவர்கள் இப்போது ரேடார் தமிழ்நாட்டை நோக்கித் திருப்பி இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதில் ஷிண்டே இடத்திற்கு நிறையப் பேர் தமிழ்நாட்டில் விண்ணப்பித்துள்ளனர். ஆகவே பாஜக மேலிடம் குழப்பத்தில் இருக்கிறது என்று கூறியுள்ளார். உண்மையில் அதிமுகவில் என்ன நடக்கிறது? அது பற்றிப் பேசியுள்ள மருது அழகுராஜ், "அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரு பக்கம் தான் இருக்கிறார்கள். அதிமுக தலைமைக்கு அவர்கள் கட்டுப்பட்டு நடக்கிறார்கள் என்று சொன்னால், அதிமுகவுக்கு முதல் வெற்றியைப் பெற்றுத்தந்த திண்டுக்கல் தொகுதியில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி ஏன் கட்டுத் தொகையை இழந்தது?
அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கேதானே இருக்கிறார்? தொடர்ந்து வெற்றி பெற்றுவரும் நத்தம் விசுவநாதன் அங்கேதானே இருக்கிறார்? பிறகு ஏன் திண்டுக்கல்லில் அதிமுக தோற்றது? அங்கே கூட்டணிக் கட்சி தோற்றாலும் அதிமுகவின் தோல்விதான். கட்சியில் ஜனநாயக இருக்கிறது என்றால், எதிர்க் கருத்தை ஏற்க வேண்டும் இல்லையா? பிறகு ஏன் அடிதடி நடக்கிறது? சகக் கட்சிக்குள்ளாகவே ஒருவரை இருவர் அடித்துக் கொள்வதா ஜனநாயகம்?
அதிமுக எந்தக் காலகட்டத்திலும் திமுகவுக்கு அடுத்த கட்சி என்ற நிலையை இழந்ததில்லை. ஆனால், கடந்த தேர்தலில் 13 தொகுதிகளில் ஆளும் கட்சிக்கு அடுத்த 2வது இடத்தையே இழந்துள்ளது. இது கட்சியில் ஏற்றப்பட்டுள்ள சரிவு அல்ல; பேரழிவு. இரண்டு முதலமைச்சரைத் தந்த ஆண்டிபட்டியில் ஒரு வாக்குச் சாவடியில் ஒரு ஓட்டு கிடைக்கவில்லை. இப்போது கள ஆய்வு என்ற பெயரில் கட்சிக்குக் கலவரம் நடக்கிறது. உடனே பொதுக்குழுவை நடத்தப் போகிறேன் என்று எடப்பாடி கூப்பிடுகிறார்.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏட்டிற்கு நான் 15 ஆண்டுகள் ஆசிரியராக இருந்துள்ளேன். பல கட்சிகளுக்கு ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது சீட்டு கொடுக்கவில்லை. ஆனாலும் அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளோம். ஒரு செய்தியை வெளியிட்டுவிடுங்கள் என்று பல கட்சிகள் பேசி இருக்கின்றன. இன்று என்ன நிலைமை? அதிமுகவுடன் கூட்டணி இல்லை என ஒரு கட்சி அறிக்கை விடுகிறது. நான் அறிந்த வரை தேமுதிகவைக் கடைசியில் கெஞ்சித்தான் அழைத்து வந்தார்கள் என அறிகிறேன்.
விஜய் கட்சி தொடங்கும்போதே தனது தலைமையில் ஆட்சி என்பதை தெளிவுபடுத்திவிட்டார். தங்களை நம்பி வருபவர்களுக்குச் சீட்டு மட்டும் இல்லை; அதிகாரத்திலும் பங்கு தருவேன் என்று புரட்சிகரமான ஒரு கருத்து அறிவித்தார். அவர் சொன்ன பிறகு அதிமுகவை விமர்சிக்கவில்லை. அவர் கூட்டணிக்கு வருவார் என அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கினார்கள். அதை விஜய் புரிந்து கொண்டு அறிக்கை விட்டுவிட்டார்.
அதிமுக 23% வாக்குவங்கியை வைத்துள்ளது. பாஜக 18% இல் இருக்கிறது. இன்று பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்து வருகிறது. இரண்டு கட்சிக்கு மிகப்பெரிய வாக்கு வித்தியாசம் இல்லை. ஜெயலலிதா இருந்த போது 42% வாக்குகளை வைத்திருந்தோம். இன்று அந்த நிலை உள்ளதா? வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவைப் போல் ஒரு ஆட்சியை உண்டாக்க பாஜக முயற்சிக்கும். அதை எடப்பாடி ஏற்கவில்லை எனில் கட்சிக்குள் கலவரம் நடக்கும். இப்போது எடப்பாடியுடன் உள்ள தேமுதிக வரும் தேர்தலில் அணி மாறக்கூடும்.
இன்றைய நிலையில் பாஜகவை விட்டால் அதிமுகவுக்கு வாய்ப்பே இல்லை. யாரும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை. சீமான் வருவார் என்றார்கள். அவரும் மறுத்துவிட்டார். பாஜக கூட்டணி பெற்ற வாக்குகளையும் அதிமுக வாக்குகளையும் கூட்டிப் பாருங்கள். அந்தத் தரவுகள் படி 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும். அதனால்தான் பாஜகவுடன் இருந்திருந்தால் 30 தொகுதியை வெற்று இருப்போம் என்று வேலுமணி சொன்னார்.
இன்றைக்குக் கட்சி ஒன்றுபடுவதற்கும் பாஜகவுடன் கூட்டணி வைத்து அதிமுகவை வெற்றிப்பாதைக்கு அழைத்துப் போவதற்கும் தடையாக இருந்தவர் எடப்பாடி மட்டும்தான். அந்தநிலை 2026இல் மாறலாம். அப்படி இல்லை எனில் உதயநிதி சொன்னதைப் போல திமுக 200 இடங்களைக் கைப்பற்றும். அதற்கு எடப்பாடியே துணைப் போய்விடுவார்" என்கிறார்.












Click it and Unblock the Notifications