வேளச்சேரி கொடூர பள்ளம்: அதிதிறன் கொண்ட கிரேன் மூலம் மீட்க முயற்சி! விடிய விடிய.. வெளியான பரபர தகவல்!
சென்னை: மழை வெள்ளத்தின்போது வேளச்சேரியில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி 85 மணி நேரத்தைக் கடந்து தொடர்கிறது. கிரேன் மூலமாக கண்டெய்னரை தூக்கும் பணி விடிய விடிய நடக்கும் எனத் தெரிகிறது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கன மழையால் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. திங்கட்கிழமையும் மழை தொடர்ந்த நிலையில், அன்று முற்பகலில், வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் உள்ள எல்.பி.ஜி கேஸ் ஃபில்லிங் ஸ்டேஷன் அருகே தனியார் நிறுவனம் சார்பில் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டு, 50 அடி ஆழத்துக்கும் அதிகமான மிகப்பெரிய பள்ளமாக மாறியது.

இதில், அருகில் இருந்த கண்டெய்னர், நிழற்குடையின் ஒருபகுதி, கேஸ் ஃபில்லிங் ஸ்டேஷனின் ஒரு பகுதி என அனைத்தும், பள்ளத்தில் சரிந்தது. கட்டுமான பணி நடைபெற்ற இடத்தின் அருகில், கண்டெய்னரில் வசித்து வந்த கட்டுமான தொழிலாளர்கள் 4 பேர் அந்தப் பள்ளத்தில் சிக்கினர். அதில், 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 2 பேரை மீட்கும் பணி தொடர்ந்து 4வது நாளாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் தமிழக தீயணைப்பு வீரர்களும் இணைந்து அந்த இருவரையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திங்கட்கிழமை தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால், மீட்புப் பணியை வேகப்படுத்த இயலவில்லை. எனினும், அன்று இரவு மழை விட்டதும், தொடர்ந்து, அந்த பள்ளத்தில் இருந்து நீரை அகற்றும் பணி வேகமாக நடந்தது. நீர் தொடர்ந்து ஊறியதால், ராட்சத பம்ப்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றியும், இன்னும் பள்ளத்தில் நீர் தேங்கி உள்ளது. இதனால், மழைநீரை அகற்றும் முயற்சி பலன் தரவில்லை.
பள்ளத்தில் சரிந்து விழுந்து 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில், உள்ளே சிக்கியுள்ள 2 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. உள்ளே சிக்கிய தொழிலாளர்களின் உறவினர்கள் அந்த பகுதியில் கதறலோடு காத்திருந்து வருகின்றனர். பள்ளத்தில் சிக்கி இருக்கும் தொழிலாளர்கள் தற்போது என்ன நிலையில் உள்ளார்கள் என்ற கேள்வி இன்னும் விடை தெரியாமல் நீடிக்கிறது.

நேற்று மாலை முதல் மீட்புப் பணி வேகமெடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதிக இழுவைத் திறன் கொண்ட கிரேன் அங்கு வரவழைக்கப்பட்டது. மேலும், பெரிய கூண்டு ஒன்று அங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சுரங்கப் பணிகள், பெரிய கிணறுகளில், தீ விபத்துகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்க பயன்படுத்தப்படும் கூண்டு அங்கு கொண்டுவரப்பட்டது.
ராட்சத மோட்டார்கள் மூலம் நீரை வெளியேற்றும் முயற்சிகள், தொடர்ந்து நீர் ஊறுவதால் பலன் அளிக்காத நிலையில், உள்ளே சிக்கிய கண்டெய்னரை, அதிக சக்தி வாய்ந்த கிரேன் மூலம் இழுப்பதற்கான முயற்சி தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, கிரேனை பாதுகாப்பாக பொருத்தி, வேலையைத் தொடங்க சில மணி நேரங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. இதனால், மீட்புப் பணிகள் இரவு முழுவதும் விடிய விடிய நடைபெறக்கூடும் எனத் தெரிகிறது.
இந்த மீட்புப் பணி நடைபெறும் இடம் பச்சை திரை கொண்டு சுற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பத்திரிகையாளர்கள், ஊடகத்தினர் அனுமதிக்கப்படவில்லை. நமது ஒன் இந்தியா தமிழ் செய்தியாளர்கள், அங்கு சென்று வீடியோ லைவ் செய்து வந்த நிலையில், போலீசார் அங்கிருந்து அனைவரையும் அப்புறப்படுத்தினர். அப்போது செய்தியாளர்கள் போலீசார் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்கக் கோரி, பொதுமக்களும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும், போலீசார் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
மீட்பு பணி இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதாக கூறப்படும் நிலையில், அனைவருக்கும் பெரும் கவலை எழுந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று பகல் 12 மணியளவில் அவர்கள் பள்ளத்தில் சிக்கிய நிலையில் வெள்ளிக்கிழமை தொடங்கி விட்ட நிலையில், 85 மணி நேரத்தைக் கடந்துவிட்டது. 85 மணி நேரமாக உள்ளே உயிருடன் தாக்குப் பிடித்து இருக்க முடியுமா என்ற கேள்விகளும் உள்ளன.
இது போக, உள்ளே சிக்கியவர்கள் கண்டெய்னரில் இருந்த 2 பேர் தானா அல்லது, நிழற்குடையின் ஒரு பகுதி, கேஸ் ஃபில்லிங் ஸ்டேஷனின் ஒருபகுதியும் பள்ளத்திற்குள் மூழ்கி உள்ளதால், அங்கு யாரேனும் இருந்தார்களா என்ற சந்தேகங்களும் அச்சமும் தொடர்கின்றன. மீட்புப் பணி முழுமையாக முடியும் போதுதான் இதற்கெல்லாம் விடை தெரியும்.












Click it and Unblock the Notifications