கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. திரண்டு வரும் "இந்தியா" கூட்டணி.. ஆஹா அரசியல் களம் மொத்தமா மாறுதே! ட்விஸ்ட்
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், இது இந்தியா கூட்டணிக்கு மிக பெரிய பூஸ்டாக இருக்கும் என கருதப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021ஆம் ஆண்டில் கொண்டு வந்தது. இருப்பினும், அந்த புதிய மதுபான கொள்கை வகுப்பதில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து இது தொடர்பாக விசாரிக்க டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டார். அந்த மதுபான கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றுவிட்ட போதிலும், இது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
கெஜ்ரிவால்: இந்த மதுபான கொள்கை முறைகேடு வழக்கு, டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் தான் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைதாகி ஓராண்டிற்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார். இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் இதே வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே கெஜ்ரிவால் தரப்பில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜூன் 4ஆம் தேதி வரை கெஜ்ரிவால் ஜாமீன் கோரினார். ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்கி அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும் அதையும் தாண்டி ஜூன் 1 வரை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜாமீன்: லோக்சபா தேர்தலில் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்வார் என்பதால் அது இந்தியா கூட்டணிக்குப் பெரிய பூஸ்டாக இருக்கும். குறிப்பாக டெல்லிக்கு வரும் மே 25ஆம் தேதி தேர்தல் நடக்கும் நிலையில், இப்போது கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது இந்தியா கூட்டணிக்கு நல்ல செய்தியாகும்.
இந்தியா கூட்டணி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், இதை இந்தியா கூட்டணி வரவேற்றுள்ளது. லோக்சபா தேர்தலில் அவர் பிரசாரம் செய்ய அனுமதி தரப்பட்டுள்ள நிலையில், இதுவும் இந்தியா கூட்டணிக்கு மிக பெரிய பிளஸ் பாயிண்டாக மாறும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சிவசேனா: சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரேவும் இந்த உத்தரவை வரவேற்றுள்ளார்.. நீதிமன்ற உத்தரவு டெல்லி முதல்வருக்கு நீதியைப் பெற்றுத் தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "நாட்டில் நடக்கும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதியும் நிவாரணமும் கிடைப்பது மாற்றத்தின் மிகப்பெரிய அறிகுறியாகும்.
அவர் உண்மையைப் பேசுகிறார், பாஜக விரும்பாதது இதுதான். இது அவருக்கும் இந்தியாவுக்கும் பலத்தை தருகிறது. நமது அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ்: அதேபோல காங்கிரஸ் கட்சியும் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளது. கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் காங்கிரஸ் வரவேற்பதாகவும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் இதேபோன்ற நிவாரணம் கிடைக்கும் என நம்புவதாகவும் காங்கிரஸ் கட்சியின் பவன் கேரா தெரிவித்துள்ளார்.
மம்தா: கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, "மக்களவைத் தேர்தல் நடக்கும் நிலையில், இந்த உத்தரவு பயனுள்ளதாக இருக்கும்.. கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்துள்ளதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தற்போதைய தேர்தல் சூழலில் இது மிகவும் உதவியாக இருக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications