Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடலை வெட்டி ரத்த ஊர்வலம்.. மொகரம் என்றால் என்ன? இஸ்லாமிய வரலாற்றில் மறக்க முடியாத 2 சம்பவங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று முஹர்ரம் ஆஷுராவை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஒருபக்கம் நோன்பு நோற்க, மறுபக்கம் ஷியா பிரிவினர் உடலை கத்தியால் கீறி ஊர்வலம் செல்கிறார்கள். மொகரம் என்று தமிழ்நாட்டில் அழைக்கப்படும் முஹர்ரம் என்றால் என்ன? விரிவாக பார்ப்போம்.

ஆங்கில வருடத்திற்கு எப்படி ஜனவரி முதல் மாதமோ, தமிழ் வருடத்துக்கு எப்படி சித்திரை அல்லது தை முதல் மாதமாக கூறப்படுகிறதோ அதேபோல், இஸ்லாமிய வருடத்துக்கு முஹர்ரம் முதல் மாதமாக உள்ளது. இந்த மாதங்களின்படியே இஸ்லாமிய கடமைகள் பின்பற்றப்படுவதால் அனைத்து மொழி பேசும் இஸ்லாமியர்களுக்கும் முஹர்ரம் சிறப்பு மிகுந்த ஒன்றாக உள்ளது.

What is Muharram ashura? Why Shias and scratching there body and went procession

நபிகள் நாயகம் தான் பிறந்த ஊரான மக்காவில் இருந்து உயிரை பணயம் வைத்து மதினாவுக்கு சென்றது ஹிஜ்ரி என்று அழைக்கப்படுகிறது. அந்த நாளில் இருந்து இஸ்லாமிய ஆண்டு கணக்கிடப்பட்டு ஹிஜ்ரி ஆண்டு என்று அழைக்கப்பட்டு வருகிறது. பிறையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வரும் இந்த இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதம்தான் முஹர்ரம்.

இந்த மாதத்தின் 10 வது நாளை முஹர்ரம் ஆஷுரா என்று அழைக்கிறார்கள். இஸ்லாமிய ஆண்டில் உள்ள சிறப்பான நாட்களில் ஆஷுராவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. முஹம்மது நபியின் பிறப்புக்கு முன்பும் பின்பும் இந்த நாளில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளதாக இஸ்லாமிய வரலாறு தெரிவிக்கிறது.

குறிப்பாக யூதர்களால் வணங்கப்படும், இஸ்லாமியர்களால் இறைத் தூதராக போற்றப்படும் மோசஸ் என்ற மூசா நபியையையும் அவரை பின்பற்றிய கூட்டத்தையும், அப்போது எகிப்தை ஆட்சி செய்த கொடுங்கோல் மன்னன் பிர்அவ்னின் படைகளிடம் இருந்து காப்பாற்ற நைல் நதியை இரண்டாக பிளந்து, மன்னனின் படைகளை அல்லாஹ் அழித்ததாக குர்ஆன் தெரிவிக்கிறது.

இந்த நாளில் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்குமாறு நபிகள் நாயகம் கேட்டுக்கொண்டார்கள். அதன் பேரில் 2 நாட்கள் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பது வழக்கம். இந்த நாளில் நோன்பு வைப்பது ரமலான் மாதத்தைபோல் கட்டாய கடமையல்ல. நன்மை கருதி இந்நாளில் ஏராளமானோர் நோன்பு நோற்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க இதே நாளில் இஸ்லாமிய வரலாற்றின் கரை படிந்த சம்பவமும் நடந்தேறியது. அதுதான் கர்பலா பயங்கரம். முஹம்மது நபியின் மகள் வழிப்பேரன் இமாம் ஹுசைன், அப்போதைய ஆட்சியாளரான யசீதின் படைகளால் கர்பலா என்ற பகுதியில் சுற்றி வளைத்து கொல்லப்பட்டதால் இந்த நாளை ஷியா பிரிவினர் துக்க நாளாக அனுசரித்து உடலை கீறிக்கொண்டு ஊர்வலம் செல்கிறார்கள்.

இஸ்லாமிய கலீபாவான முஆவியா அவர்கள் ஹிஜ்ரி 60 ஆம் ஆண்டில் இறப்பதற்கு முன்பாக யசீது என்பவரை அடுத்த கலீபாவாக நியமிக்கும் முடிவில் இறந்தார். அவர்கள் இறந்த பிறகு கலீபாவாக யசீது பதவியேற்றுக்கொண்டார். ஆனால், மதினாவில் உள்ள முஹம்மது நபியின் பேரன் ஹுசைன் உள்ளிட்ட பல தலைவர்கள் யசீதை ஏற்று உறுதிப் பிரமானம் செய்ய மறுத்தார்கள்.

இதே நிலை அப்படியே தொடர்ந்தால், யசீன் படைகளால் புனித நகரங்களான மக்கா, மதீனாவுக்கு பிரச்சனை வந்துவிடும் என்று அஞ்சிய இமாம் ஹுசைன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பெண்கள், நண்பர்கள், இஸ்லாமிய தலைவர்கள் என 72 பேருடன் கூபாவுக்கு புறப்பட்டு சென்றார். ஆனால், ஹுசைன் படைதிரட்டி போருக்கு வருவதாக தகவல் பரவியது. உடனே யசீது ஹுசைனை தடுத்து நிறுத்த 4000 பேர்களை கொண்ட தன்னுடைய படைகளை அனுப்பினார்.

அப்போது ஆளுநர் இப்னு சியாத்தின் படைகள் கர்பலா என்ற இடத்தில் இமாம் ஹுசைனையும் அவரது ஆட்களையும் சுற்றி வளைத்து கூபாவுக்கு செல்ல விடாமல் தடுத்தது. இமாம் ஹுசைன் அவர்களிடம் சரணடைய மறுத்தார். பல நாட்கள் கழிந்தன. கர்பலாவிலேயே ஹுசைன் தனது ஆட்களுடன் கூடாரமிட்டு தங்கினார். யசீதிடம் தன்னை செல்ல விட வேண்டும் அல்லது தன்னை மதீனாவுக்கு திரும்பி செல்ல அனுமதிக்க வேண்டும் அல்லது நாட்டின் எல்லைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த யசீதின் படைகள் போரை தொடங்கினர். 72 பேரை 4000 பேர் கொண்ட படை கொடூரமாக தாக்கியது. காலை தொடங்கிய போர் பொழுது சாயும் வரை தொடர்ந்தது. 72 பேரில் பெண்களை தவிர அனைவரும் கொல்லப்பட்டார்கள். ஆனால், பெண்களும் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த போரில் கடைசி வரை போராடிய இமாம் ஹுசைன் உடல் முழு வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு உயிர் துறந்தார்.

அவரது தலையை துண்டித்து காட்சிப் பொருளாக யசீதின் படையினர் வைத்தார்கள். அவருடன் வந்த மற்ற ஆண்களின் தலைகளையும் துண்டித்து டமாஸ்கஸில் இருக்கும் யசீதுக்கு அனுப்பி வைத்தார்கள். இஸ்லாமிய வரலாற்றின் கரை படிந்த நிகழ்வான இதில் இமாம் ஹுசைன் அவர்களுக்கு விழுந்த வெட்டுக் காயங்களை நினைவுபடுத்தும் வகையில் ஷியா பிரிவினர் தங்கள் உடல்களை கீறிக்கொண்டு ஊர்வலம் செல்கிறார்கள்.

தமிழ் பேசும் பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த நாளில் முஹம்மது நபியின் அறிவுறுத்தலை ஏற்று நோன்பு நோற்கிறார்கள். உடலை வெட்டி ஊர்வலம் செல்வதில்லை. ஷியா முஸ்லிம்களே இந்நாளை துக்கமாக அனுசரித்து ஊர்வலம் செல்கிறார்கள். இந்த ஊர்வலம் இஸ்லாத்துக்கு எதிரானது என்கிறார்கள் இஸ்லாமிய அறிஞர்கள்.

இஸ்லாத்தில் தன்னை தானே காயப்படுத்திக் கொள்வது, தற்கொலை செய்வது தடுக்கப்பட்டு உள்ளது. இறந்தவர்களுக்கு கூட 3 நாட்களுக்கு மேல் துக்கம் அனுசரிக்க அனுமதி இல்லை. ஆனால், அதை மீறி தங்களை தாங்களே காயப்படுத்தும் வகையில் இவ்வாறு ஊர்வலம் செல்வது தவறு என்பது இஸ்லாமிய அறிஞர்களின் விமர்சனம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+