ஹெல்மெட் அணியாததால் அபராதம்.. நடிகர் பிரசாந்தின் முதல் ரியாக்சன் இதுதான்.. செம மெசேஜ்
சென்னை: ஹெல்மெட் அணியாமல் பைக்கில் தொகுப்பாளினியுடன் பயணம் மேற்கொண்ட நடிகர் பிரசாந்த்துக்கு ரூ.2000 அபராதத்தை சென்னை போலீசார் விதித்தனர். இது சர்ச்சையான நிலையில் அதுபற்றி முதல் முறையாக நடிகர் பிரசாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் பிரசாந்த்.. 90s காலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர். அதன்பிறகு திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் அவர் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். நடிகர் விஜயுடன் ‛தி கோட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். அதேபோல் ‛அந்தகன்' என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதில் ‛அந்தகன்' திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. 9 ம் தேதி திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகிறது.

இதனால் படத்தின் புரோமோஷன் பணியில் பிரசாந்த் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் நடிகர் பிரசாந்த் உடன் பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ஊர்வசி என பலரும் நடித்துள்ளனர். இத்தகைய சூழலில் தான் பிரசாந்த் படத்தை புரோமோட் செய்வது தொடர்பாக சிறப்பு பேட்டிகள் வழங்கி வருகிறார்.
அந்த வகையில் சென்னையில் பிரபல யூடியூப் சேனலுக்கு பிரசாந்தும், பிரியா ஆனந்தும் பேட்டியளித்தனர். அதன்பிறகு பிரசாந்த் தி நகரில் பெண் தொகுப்பாளினியுடன் பைக்கில் ரைட் சென்றபடி பேட்டியளித்தார். அப்போது அவர் ஹெல்மெட் அணியவில்லை. இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் விவாதமானது. இதையடுத்து நடிகர் பிரசாந்துக்கு ரூ.2000 அபராதமாக விதிக்கப்பட்டது.
சென்னை பாண்டிபஜார் போலீசார் அபராதம் விதித்த நிலையில் அதுதொடர்பான போட்டோக்களை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் தங்களின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டனர். இந்நிலையில் தான் திருச்சியில் நடிகர் பிரசாந்த் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இதுபற்றி கேள்வி கேட்கப்பட்டது.
பத்திரிகையாளர் ஒருவர், ‛‛நீங்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் ஃபைன் போட்டுள்ளார்கள்'' என கேள்வி கேட்க முயன்றார். அப்போது குறுக்கிட்ட பிரசாந்த், ‛‛நீங்கள் இப்படி கேள்வி கேட்பீர்கள் என்பது தெரியும். அதனால் அதற்கேற்ப தயாராகி வந்துள்ளேன். தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டுகளாக ஹெல்மெட் விழிப்புணர்வு நிறைய செய்துள்ளேன். தமிழகம் முழுவதும் இலவச ஹெல்மெட் கொடுத்துள்ளேன். நீங்களும் அதனை செய்திகளாக்கி உள்ளீர்கள்.
நாகர்கோவில், திருச்சி, மதுரை என்று பல இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளேன். ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். இந்த சம்பவத்தின் மூலம் எனக்கு இன்னொரு பிளாட்ஃபார்ம் கிடைத்துள்ளது. அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் போட்டு வாகனங்கள் ஓட்டுங்கள். இது எனக்கு மட்டுமல்ல. உங்களின் குடும்பத்துக்கும் முக்கியம்.
நீங்கள் எங்காவது போகிறீர்களா? 5 நிமிடம் முன்பே புறப்பட்டு செல்லுங்கள். அவசரஅவசரமாக கிளம்பாதீர்கள். நாம் பலமுறை பார்த்துள்ளோம். அவசர அவசரமாக பைக்கில் ‛கட்' அடித்து வேகமாக போகிறீர்கள். இது எல்லாம் வேண்டாம். உங்களுக்கும் ஃபேமிலி இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது நடந்தால் அது யாரை பாதிக்கும்? உங்களை தான் பாதிக்கும். மீண்டும் சொல்கிறேன். இதுபோன்ற சான்ஸ் கிடைத்ததை வைத்து சொல்கிறேன். அனைவரும் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக பைக் ஓட்டுங்கள்'' என்றார்.












Click it and Unblock the Notifications