மன்னிப்பு கேட்காத அண்ணாமலை.. அடுத்தகட்ட ‘ஆக்ஷன்’ என்ன? “தலை சொன்னதும்..” ஆர்.எஸ்.பாரதி பதில்!
சென்னை : திமுகவினரின் சொத்து என அண்ணாமலை ஒரு பட்டியலை வெளியிட்டு அவதூறு பரப்பியதாக திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அண்ணாமலையின் வக்கீல் நோட்டீஸுக்காக காத்திருக்கிறோம் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக பிரமுகர்களின் சொத்துப்பட்டியல் எனக் கூறி ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களின் சொத்து விவரங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் இது தொடர்பாக சிபிஐ-யிடம் புகார் அளிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.

திமுக மறுப்பு : அண்ணாமலையின் இந்த குற்றாச்சாட்டை திமுக முற்றிலுமாக மறுத்தது. அண்ணாமலை சொத்து பட்டியல் வெளியிட்டதுமே செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை எந்தவித ஆதாரமும் இன்றி அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டினார். அண்ணாமலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அண்ணாமலை தனது கருத்துக்கு மன்னிப்பு கோரவில்லை என்றால் 500 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரி திமுக சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அண்ணாமலை மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக கூறினார். "திமுகவினர் சொத்து குறித்து வெளியிட்ட செய்தி உண்மை. திமுகவினர் மீதான புகாருக்கு ஆதாரம் இருக்கிறது. இதில் மன்னிப்பு கேட்க மாட்டேன். இழப்பீடும் வழங்க முடியாது. வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தயார்" என்று தெரிவித்தார்.
அடுத்தகட்ட நடவடிக்கை : இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்..எஸ்.பாரதி, "அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து தனிப்பட்ட முறையில் திமுக பிரமுகர்கள் ஒவ்வொருவரும் அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஆனால் அண்ணாமலையிடம் இருந்து எங்களுக்கு இன்னும் வக்கீல் நோட்டீஸ் வந்து சேரவில்லை. வக்கீல் நோட்டீஸ் முழுமையாக வரும்போது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.
அவதூறு வழக்குகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு ஆட்சியிலும் அவதூறு வழக்குகள் சில சமயம் தள்ளுபடி ஆகி விடுகின்றன. எனவே சட்டப்படி நடவடிக்கை எடுக்க அண்ணாமலையின் வக்கீல் நோட்டீஸுக்காக காத்திருக்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications